இங்கிலாந்து டூர்
கடந்தாண்டு இந்தியா- இங்கிலாந்துக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் 4 போட்டிகளில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகித்த நிலையில், 5வது போட்டி மட்டும் எதிர்பாராத விதமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொடரை முடிப்பதற்காக தான் ஒரு டெஸ்ட் போட்டி தற்போது நடைபெறுகிறது. இதன் முடிவு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எதிரொலிக்கும்.
கடும் பயிற்சி
இதனையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றடைந்துவிட்டனர். அங்கு நேற்று முதல் பயிற்சிகளையும் தொடங்கிவிட்டனர். ஜூன் 24ம் தேதி முதல் கவுண்டி அணியுடன் 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் தொடங்கவுள்ளது. ஒரு போட்டிக்காக இவ்வளவு பயிற்சியா என ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
டிராவிட்டின் விளக்கம்
இந்நிலையில் அதற்கான காரணத்தை டிராவிட் கூறியுள்ளார். அதில், இது ஒரே ஒரு போட்டியாக இருக்கலாம், ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியாகும். கடந்தாண்டு சிரமப்பட்டு வெற்றி கண்ட வீரர்களுக்கு இது மிகவும் முக்கியம் தான். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியை சமாளிப்பது தற்போது கடினம்.
என்ன காரணம்
கடந்தாண்டு இங்கிலாந்து அணி, இந்தியாவை விட பலவீனமாக இருந்தது போல இருந்தது. ஆனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். இந்தியாவை போன்றே அவர்களும் முழு பலத்துடன் களமிறங்கவுள்ளதால் ஒரு சுவாரஸ்ய போட்டி நமக்கு காத்துள்ளது என டிராவிட் கூறியுள்ளார்.