இந்திய 'பி' டீம்
ஜூன் 22ம் தேதி முடியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி உள்ளது. இந்த நிலையில், ஜுலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். அதேசமயம், இந்திய 'பி' டீம் இத்தொடரில் பங்கேற்கும் என்றும் கூறினார். சீனியர் வீரர்களில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவர் மட்டுமே இத்தொடரில் பங்கேற்கின்றனர். மற்ற அனைத்து வீரர்களும் ஜுனியர்கள் தான்.
தகவல் உறுதி
இந்த நிலையில், இலங்கை தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு வர, பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், இதுவரை ஒப்புக்கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. ஆனால் தற்போது ஏறக்குறைய இந்த தகவல் உறுதியாகியுள்ளது.
அண்டர்-19 கோச்
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், "ரவி சாஸ்திரி, பாரத் அருண், விக்ரம் ரத்தோர் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி அளிப்பார். அவர் ஏற்கனவே இந்திய அண்டர்-19 அணிக்கு பயிற்சி அளித்திருக்கிறார். ஆகையால், அணியில் செல்லும் பெரும்பாலான வீரர்களுடன் அவருக்கு ஏற்கனவே இணக்கமான புரிதல் இருக்கிறது. அது அணிக்கு சாதகமாக அமையும்" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பயோ - பபுள்
இலங்கை செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல், இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு, இத்தொடருக்கான பயோ-பபுள் உருவாக்கப்படும். ஜுலை 13, 16, 19 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஜுலை 22-27 வரை 3 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
நீண்ட கால கோரிக்கை
இன்று இந்திய அணியின் எதிர்காலங்களாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஐபிஎல் ஸ்டார்ஸ்களாக ஜொலிக்கும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து உருவாக்கியவர் ராகுல் டிராவிட். இன்று இந்திய அணியின் 'ஃபியூச்சர் விக்கெட் கீப்பர்' எனும் நம்பிக்கையை அழுத்தம்திருத்தமாக விதைத்திருக்கும் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது. ஆகையால், டிராவிட் போன்ற ஒரு மெகா பவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.