முன்னோட்டம்
டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விளங்குகிறது. இதில் பஙகேற்கும் வீரர்களை வைத்தே , உலக கோப்பை அணியை இந்தியா தேர்வு செய்ய உள்ளது. இதனால் எந்த வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கேப்டனும், பயிற்சியாளரும் இணைந்தே செயல்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
டிராவிட்டுக்கு கொரோனா
இந்த இக்கட்டான தருணத்தில் தான் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் டிராவிட் ஆசிய கோப்பை தொடருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்த பணியில் தடையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் இணைவாரா?
இதனையடுத்து டிராவிட்டுக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியுடன் பயணிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குணமடைந்த பிறகு டிராவிட், மீண்டும் இந்திய அணியில் இணைவார் இல்லை ஓய்வு எடுத்து கொள்வாரா என்ற தகவல் வெளியாகவில்லை.
மாற்று வழி என்ன?
இதுவரை இந்திய அணி தனது முழு பலமான அணியை பிளேயிங் லெவனில் பயன்படுத்தவில்லை. இதற்கு ஆசிய கோப்பை நல்ல வாய்ப்பாக அமைந்தது. தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் டிராவிட் இணையத்தளம் வாயிலாக அணியின் ஆலோசனை கூட்டம் மற்றும் யோசனைகளை வழங்கலாம். எனினும் அது அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்.