கௌரவம் அளித்த ஐசிசி
கடந்த ஜூலை 2 அன்று ஐசிசி இந்த வருடத்திற்கான "ஹால் ஆஃப் ஃபேம்" பட்டியலில் இடம் பெறும் வீரர்களின் பெயரை அறிவித்தது. அதில் கிரிக்கெட்டில் "இந்தியாவின் தடுப்புச்சுவர்" என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிடுக்கு இந்த ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் கௌரவம் அளிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்தது.
நினைவு சின்னம் வழங்கிய கவாஸ்கர்
இதற்கான விழா டுப்ளின் நகரத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், நினைவுச் சின்னம் வழங்கும் விழா இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் 5வது கிரிக்கெட் போட்டிக்கு முன் நடந்தது. அதில் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிடுக்கு அந்த நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
மிகப் பெரிய கௌரவம்
இது பற்றி கருத்து தெரிவித்த டிராவிட், "ஐசிசி-யால் கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம்-இல் என் பெயர் இடம் பெறுவது மிகப் பெரிய கௌரவம். தலைமுறைகளை கடந்து எந்த காலத்திலும் தலைசிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்தியில் நம் பெயரையும் காண்பது என்பது கிரிக்கெட் வாழ்வில் ஒருவர் கனவு மட்டுமே காண முடியும்" என கூறினார்.
இந்தியாவில் 5 பேர் மட்டும்
இந்தியா சார்பில் இதுவரை டிராவிட் தவிர்த்து நான்கு வீரர்கள் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் அனில் கும்ப்ளே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பல வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
அதிக பந்துகள் சந்தித்து சாதனை
இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் தன் தன் தடுப்பாட்டத்தால் பெயர் எடுத்த ராகுல் டிராவிட், 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களும் எடுத்துள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 31,258 பந்துகளை சந்தித்துள்ளார் டிராவிட். இந்த சாதனையை ஒருவர் கூட இன்னும் நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.