மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையை ரஷ்யா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. இதற்காக ரூ.1,750 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானம், ஒருநாள் மழையில் சேதமடைந்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து ரஷ்யாவில் நடந்தது. இதில் பைனலில் குரேஷியாவை வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
இந்த உலகக் கோப்பைக்காக ரஷ்யாவில் 11 இடங்களில் 12 மைதானங்கள் கட்டப்பட்டன. பல ஆயிரம் கோடி ரூபாயில் இந்த மைதானங்கள் கட்டப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த நிலையில், வோல்கோகிராட் நகரில் சமீபத்தில் கடும் மழை பெய்தது. இதில், ரூ.1,750 கோடியில் அமைக்கப்பட்ட அந்த மைதானத்துக்கு வரும் பாதை உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
இந்த மைதானத்துக்கு அருகே உள்ள ஏரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், மைதானத்துக்கு வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதைகள், சாலைகள் அரித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால், மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த பாதைகள் துண்டிக்கப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டும் அளவுக்கு அங்கு பள்ளம் ஏற்பட்டது. இதைத் தவிர மைதானத்திலும் பல இடங்களில் விரிசல் உள்ளிட்ட சேதம் ஏற்பட்டது.
இந்த மைதானத்தில் உலகக் கோப்பையின்போது 8 ஆட்டங்கள் நடந்தன. 45 ஆயிரம் பேர் அமரக் கூடிய இந்த மைதானத்தில், போட்டிகள் நடந்தபோது இதுபோன்ற சேதம் ஏற்பட்டிருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையில் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட மைதானங்களை ரஷ்யா இனி எதற்காக பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.