கார்டிப்:உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7வது லீக் ஆட்டம் கார்டிப்பில் ஏற்கனவே அறிவிக்கப்படி தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இந்த ஜோடி பொறுப்பாக ஆடி, அணிக்கு நல்ல துவக்கத்தை தந்தது.
கருணரத்னே 30 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய திரிமன்னே 25 ரன்னில் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவரை தொடர்ந்து ஒரு பந்து இடைவெளியில் குசல் மெண்டிஸ் 2 ரன்னிலும், மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
இவர்களின் விக்கெட்டுகளை காலி செய்தவர் முகமது நபி. அவரது சுழலில் தங்களது விக்கெட்டுகளை அவர்கள் பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெயா டிசில்வா ரன் எதுவும் எடுக்காமலும், திசரா பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
உதனா 10 ரன்னில் அவுட்டானார். 144 ரன்களில் இருந்து 149 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அதிர்ச்சி அளித்தது. ஆனால், தொடக்க வீரர் பெரோரா, அரைசதத்தை பதிவு செய்து 78 ரன்னில் அவுட் ஆனார்.
33 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது திடீரென மழை குறுக்கிட்டது. பலத்த மழை நீடிப்பதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. சுரங்கா லக்மல் மற்றும் மலிங்கா களத்தில் உள்ளனர். மழை நின்றபிறகு தான் ஆட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.