ஆட்டம் கைவிடப்பட்டது
தொடர்ந்து பெய்த மழை காரணமாக முதலில் உணவு இடைவெளி வரை ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் மழை பெய்யுமா, ஆட்டம் தொடங்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மழையின் தாக்கம்
மழை பொழிவால் தற்போது சவுத்தாம்டன் பிட்ச்-ல் ஓரளவிற்கு புற்கள் இருக்கும். ஈரப்பதம் அதிகளவில் இருக்கும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் ஓரளவிற்கு வெயில் அடித்து பிட்ச் வறண்டு காணப்பட்டால் தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்திய ப்ளேயிங் 11
இந்திய அணியோ, தனது ப்ளேயிங் 11-ல் மூன்றே மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியா டாஸ் போடும் வரை தனது ப்ளேயிங் 11-ஐ சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. எனினும் அந்த அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று தான் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் மாற்றம்
இந்நிலையில் இந்திய அணி தனது ப்ளேயிங் 11ல் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்தின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் அச்சுறுத்தல் கொடுப்பார் என்பதால் அவரை அணியில் வைத்துக்கொள்ளும். ஆனால் ஜடேஜா தனது பந்துவீச்சில் பெரியளவில் 'வேரியேசன்ஸ்' காட்ட மாட்டார் என்பதால் வெளியில் உட்கார வைப்பார் என தெரிகிறது. ஜடேஜாவிற்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனோ, அல்லது வேகப்பந்துவீச்சாளரையோ சேர்த்துக்கொள்ளலாம். முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது இதை தான் பரிந்துரைத்து வருகின்றனர்.