ஐபிஎல் பின்னடைவு
2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாம் இடத்தை பிடித்தது. அந்த அணியில் பாதி தொடரில் கேப்டனை மாற்றினர். ரஹானே கேப்டன் பதவியை இழந்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் என்றார்கள். அவரும், பல வெளிநாட்டு வீரர்களும் உலகக்கோப்பை தொடருக்காக பாதியில் கிளம்பினர். அந்த அணி தொடரில் பின்னடைவை சந்தித்தது.
இங்கிலாந்து வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் அதிக இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் என மூன்று முக்கிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதற்கு ஒரு காரணம் உள்ளது.
இங்கிலாந்து முதலாளி, வார்னே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய உரிமையாளர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்திய பூர்விகம் கொண்டவரான மனோஜ் படாலே. அவரும், அந்த அணியின் விளம்பர தூதருமான ஷேன் வார்னேவும் சேர்ந்து சல திட்டங்களை தீட்டி உள்ளனர்.
இங்கிலாந்தில் பள்ளி
அதன்படி, இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள ரீட்ஸ் பள்ளியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அகாடமி துவங்க உள்ளனர். ஏற்கனவே, இந்தியாவில் ராயல் கோல்ட்ஸ், ராயல் ஸ்பார்க்ஸ் என ஆண், பெண் ஒரு பாலருக்கும் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
வார்னே விளக்கம்
இந்த வெளிநாட்டு கிளை தொடக்கம் பற்றி பேசிய ஷேன் வார்னே, வியாபாரம் மற்றும் விளையாட்டு ஒன்றோடு ஒன்று இணைந்தது. பலரும் கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி பேசி வருகிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதை அதை கண் முன் செயல்படுத்தி, நாங்கள் எல்லோருக்கும் முன்னே இருக்கிறோம் என்பதை கூறி வருகிறோம் என்றார்.
நாடு நாடாக செல்ல திட்டம்
எதிர்கால கிரிக்கெட் இது தான் என கூறும் வார்னே, இங்கிலாந்து மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பெரிய திட்டம் வைத்து இருக்கிறோம் என கூறி அதிர வைத்துள்ளார்.
ஐபிஎல்-இல் என்ன செய்யப் போகிறது?
அகாடமி திட்டம் பற்றி சிந்தித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் பற்றி என்ன திட்டம் வைத்துள்ளது என்பதே தெரியவில்லை. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
திட்டம் என்ன?
ரஹானேவை வேறு அணிகளுக்கு கை மாற்றப் போவதாக ஒரே ஒரு செய்தி வந்தது. மற்றபடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேறு பெரிய திட்டம் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அதற்குள் நாடு நாடாக சரவண பவன் ஹோட்டல் போல கிளை திறக்க உள்ளது அந்த அணி.
மற்ற ஐபிஎல் அணிகள் திட்டம்
மற்ற ஐபிஎல் அணிகள் தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. பயிற்சியாளர் மாற்றம், வீரர்கள் வாங்குவது, விற்பது என திட்டம் போட்டு வருகின்றன. குறிப்பாக, பெரிய மாற்றமாக டெல்லி கேபிடல்ஸ் அணி அஸ்வினை, பஞ்சாப் அணியிடம் இருந்து வாங்க உள்ளது.
வடிவேலு காமெடி
ஆனால், ராஜஸ்தான் எதிர்காலத்தை செயல்படுத்தி எல்லோருக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது. மூக்கு பொடைப்பா இருந்தா இப்படி தான் யோசிக்கத் தோணும் என்ற வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது!