ராஜ்கோட்: இங்கிலாந்தின் ஸ்கோருக்கு, முதல் இன்னிங்சில் தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா. சூட்டோடு சூடாக, முரளி விஜயும், புஜாராவும் ஒரு சாதனை படைத்துள்ளனர்.
ஆம், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 537 ரன்களை குவித்தாலும், மலைக்காத இந்திய அணியின் முரளி விஜய், புஜாரா ஜோடி தக்க பதிலடியை கொடுத்தது. கம்பீர் 29 ரன்னில் நடையை கட்டினாலும், 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 209 ரன்கள் சேர்த்தது.
இதன்மூலம், புஜாரா-விஜய் ஜோடி இணைந்து 2080 ரன்களை 32 இன்னிங்சுகளில் குவித்து கடந்த 10 ஆண்டில் இல்லாத ஒரு சாதனையை படைத்துள்ளன. இந்திய 2வது விக்கெட் ஜோடி ஒன்று இரண்டாயிரம் ரன்களை கடப்பது கடந்த பத்து வருடங்களில் இதுதான் முதல் முறை. இந்த ஜோடியின் ரன் சராசரி 65.3 ஆகும்.
விஜய் 126 ரன்களிலும், புஜாரா 124 ரன்களஅிலும் விக்கெட்டை இழந்த நிலையில், நைட் வாட்ச்மேனாக களம் புகுந்த அமித் மிஸ்ரா தான் சந்தித்த 2வது பந்தில் டக்அவுட் ஆனார். எனவே விராட் கோஹ்லி 26 ரன்களுடன் களத்தில் நின்றபோது இன்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. இப்போதைய நிலையில், இங்கிலாந்தைவிட 218 ரன்கள் பின்தங்கியுள்ளது. கோஹ்லி மட்டையை சுழற்றினால் இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது.