மிதாலி ராஜ் புகார்
மிதாலி ராஜ் பிசிசிஐ அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் செய்திகளில் வெளியானது. அதில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை ஓரங்கட்ட முடிவு செய்து தன்னை அவமானப்படுத்தினார் எனவும், ஆஸ்திரேலிய போட்டியின் போது அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என தன்னிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார் எனவும் குற்றம் சாட்டி இருந்தார் மிதாலி. அரையிறுதியிலும் தனக்கு இடம் அளிக்காமல் செய்தார் என கூறி இருந்தார்.
வெளிவந்த உண்மை!! என்னை அவமானப்படுத்தினார்.. சிறை வைத்தார்.. மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்
மிடில் ஆர்டர் ஏன்?
இதற்கு ரமேஷ் பவார் அளித்துள்ள விளக்கத்தில் மிதாலி ராஜ் அணியின் திட்டங்களுக்கு ஏற்ப விளையாடவில்லை எனவும், அணி கூட்டங்களில் எந்த கருத்தும் கூறாமல் இருந்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரால் விரைவாக ரன் குவிக்க முடியவில்லை. மேலும், அதிரடியாக அடித்து ஆடும் திறனும் இல்லை என்பதை பயிற்சி போட்டியில் கண்ட பின் முதல் போட்டியில் அவரை மிடில் ஆர்டரில் ஆட வைத்ததாக கூறி உள்ளார்.
ஓய்வு பெறுவேன் என மிரட்டல்
மிடில் ஆர்டரில் ஆட விரும்பாத மிதாலி அடுத்த போட்டியான பாகிஸ்தான் போட்டிக்கு முன் தான் துவக்கம் அளிக்கவில்லை என்றால் நாளை காலை ஓய்வு முடிவை அறிவிப்பேன் என மிதாலி கூறுவதாக வீடியோ அனலிஸ்ட் புஷ்கர் சாவன்ட் கூறியதாக குறிப்பிட்டுள்ளார் ரமேஷ் பவார். இந்த பிரச்சனையால் அடுத்த நாள், மிதாலி துவக்கம் அளிப்பார் என தானும் அணி மேலாளரும் இணைந்து முடிவெடுத்ததாக கூறினார்.
அணியின் திட்டத்தை மீறினார்
பாகிஸ்தான் போட்டியில் இந்தியா முதல் 6 ஓவர்களில் 48 ரன்கள் அடித்த நிலையில், மிதாலி 6 முதல் 15 ஓவர்கள் வரை 24 பந்துகள் சந்தித்து 25 ரன்கள் மட்டுமே அடித்தார். அணியின் திட்டப்படி விரைவாக ரன் குவிக்காமல் அரைசதம் அடிக்க வேண்டி அப்படி அவர் நடந்து கொண்டதாக கூறுகிறார் ரமேஷ்.
மிதாலியால் பாதிப்பு
அடுத்து அயர்லாந்து போட்டியிலும் பொறுமையாக ஆடினார். 56 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். இவர் பொறுமையாக ஆடியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் மற்ற வீராங்கனைகள் விரைவாக ரன் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்கள் என கூறியுள்ளார் ரமேஷ். அந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் மிதாலியை ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளார் ரமேஷ்.
மிரட்டல் பேச்சு
அதன் பின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் மிதாலி மீண்டும் களம் இறங்க தகுதி பெற்றுள்ளாரா என சோதனை செய்த போது அதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறி உள்ளார் ரமேஷ். மேலும், நுஷீன் என்ற முன்னாள் வீராங்கனை ஒருவர் அணி மேலாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். மிதாலி அன்று இரவு முழுவதும் அழுது கொண்டு இருந்ததாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் பிரச்சனையில் சிக்குவீர்கள் என பயமுறுத்தியதாகவும் கூறியுள்ளார் ரமேஷ்.
அரையிறுதிப் போட்டி மீது கவனம்
அதன் பின் மிதாலியை இது குறித்து சந்திக்க சென்ற போது அவர் பெரிய பிரச்சனை செய்ததாகவும், அதை பிசிசிஐ கிரிக்கெட் செயல்பாடுகள் மேலாளர் சபா கரீமிடம் கூறியதாகவும், அதற்கு சபா கரீம் முக்கியமான அரையிறுதிப் போட்டி மீது கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.
பயிற்சிக்கு வர மறுப்பு
அதையடுத்து, மிதாலி தொடர்ந்து பயிற்சிக்கு வர மறுத்த நிலையில், அரையிறுதியில், ஆஸ்திரேலியா போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற அதே அணியோடு களம் இறங்க முடிவு செய்ததாக கூறியுள்ளார் ரமேஷ் பவார்.
|
இதில் உண்மை இல்லை
ஆக, மொத்தத்தில் மிதாலி தன் சுயநலத்தை மட்டுமே பார்த்தார். அணி நலனை பார்க்கவில்லை என்பது போல கூறியுள்ளார் ரமேஷ் பவார். இந்த விவரங்கள் செய்திகளில் வெளியானதை அடுத்து இது எதுவும் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார் ரமேஷ். அப்படி என்றால் மிதாலி மீது எந்த தவறும் இல்லை என எடுத்துக் கொள்வதா? என்பதும் தெரியவில்லை.
முழு விசாரணை வேண்டும்
இந்த விவகாரம் மீது பிசிசிஐ முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். முக்கியமாக, இந்த விவகாரத்தில் பிசிசிஐ மட்டத்தில் உள்ள ஒரு உயரதிகாரி தலையிட்டார் என கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய உண்மைகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூறப்பட வேண்டும். முக்கியமான அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. அதற்கு, மிதாலி விவகாரம் தான் முக்கிய காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
மிதாலி ராஜ் பற்றி பேசறீங்களே.. தோனிக்கு நடந்தது பற்றி தெரியுமா? பிசிசிஐ ரகசியங்கள்