மாற்றம் நோக்கி..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2019 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் மாற்றங்களை நோக்கி பயணம் செய்யும் முயற்சிகளை எடுத்தது. ஆனாலும், பழைய கதையே திரும்ப தொடர்ந்து வருகிறது. அதன் பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை.
பழைய வீரர்கள் மீது நம்பிக்கை
முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராகவும், வக்கார் யூனிஸ் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருக்கிறார்கள். அவர்கள் பழைய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை மீண்டும் அணியில் தேர்வு செய்ய காரணமாக இருந்து வருகிறார்கள்.
சோயப் மாலிக், முகமது ஹபீஸ்
சோயப் மாலிக், முகமது ஹபீஸ் இருவரும் 38, 39 வயதாகும் வீரர்கள். பாகிஸ்தான் அணியில் சரியான பேட்டிங் வரிசை அமையாத காரணத்தால் வேறு வழியின்றி இந்த இரண்டு வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பற்றாக்குறை
இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் அதிக அளவில் இருந்தாலும் பேட்ஸ்மேனுக்கு பற்றாக்குறை உள்ளது. அதன் காரணமாகவே சோயப் மாலிக், முகமது ஹபீஸ் அணியில் இடம் பெற்று வருகின்றனர். புதிய கேப்டன் பாபர் ஆசாமுக்கும் வழிகாட்ட மூத்த வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
விமர்சனம் உள்ளது
ஆனால், மாலிக், ஹபீஸ் இருவரையும் அணியில் தேர்வு செய்யக் கூடாது. அவர்கள் ஓய்வு பெற வேண்டும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். அப்படித் தான் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டனும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கும் ரமீஸ் ராஜாவும் கூறினார்.
மரியாதையுடன் ஓய்வு!
"முகமது ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் அவர்களாகவே முன்வந்து மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும்" என கூறி இருந்தார். அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை ஒதுக்கும் முன் அவர்களாகவே ஓய்வு பெற்று விட வேண்டும் என அவர் யோசனை கூறி இருந்தார்.
மாலிக் கிண்டல்
அதற்கு முகமது ஹபீஸ் எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதி காத்தாலும், சோயப் மாலிக் கோபம் அடைந்து, கிண்டலாக பதில் அளித்தார். நாம் மூன்று பேருமே நம் கேரியரின் முடிவில் இருக்கிறோம். 2022இல் நாம் அனைவரும் ஓய்வு பெற்று விடுவோம் என கூறி கிண்டல் செய்து இருந்தார் மாலிக்.
அது நடக்காது
அதாவது ரமீஸ் ராஜா கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் விமர்சகராக இருப்பதில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது போல அவர் கூறி இருந்தார். அதற்கு ரமீஸ் ராஜா அளித்த காட்டமான பதிலில், பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி மனதில் பட்டதை பேசுவதில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் மேலே வர வேண்டும் என விரும்புவதில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா? அது நடக்காது என கூறி உள்ளார்.
வயது ஆகிவிடும்
மேலும், 2022இல் தான் வர்ணனை செய்வதில் இருந்து ஓய்வு பெற்றாலும், சோயப் மாலிக்கால் அப்போது வர்ணனையாளராக பணி செய்ய துவங்க முடியாது என்றும், அப்போது அவருக்கும் தன் வயது ஆகி இருக்கும் என்றும் கூறி உள்ளார் ரமீஸ் ராஜா.
அதைப்பற்றி வரலாறு சொல்லும்
மேலும், கிரிக்கெட் கேரியரை பற்றி பேசினால்.. தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த போதே ஓய்வு பெற்றதை வரலாறு சொல்லும் என கூறி உள்ளார் ரமீஸ் ராஜா. இவர்களின் இந்த வெளிப்படையான சண்டையால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மோசமான நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது.