டி20 தொடரில் முழுமையான வெற்றி
கடந்த 2015-16ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதிய 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் 3 போட்டிகளையும் வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடரை முழுமையாக கைப்பற்ற திட்டம்
அதுமுதல் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடர்களில் வெற்றி தோல்வி மாறி மாறி இருந்துள்ளது. இதனிடையே நாளை சிட்னியில் டி20 தொடரின் 3வது மற்றும் இறுதிபோட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி கொண்டு தொடரை முழுமையாக கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.
6 விக்கெட்டுகளில் 2வது போட்டி வெற்றி
கடந்த வெள்ளிக்கிழமை இரு அணிகளுக்கிடையில் முதல் டி20 போட்டி துவங்கியது. அதில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதேபோல நேற்றைய இரண்டாவது போட்டியிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டு தொடரையும் கைப்பற்றியுள்ளது.
வரலாற்றை திருப்பும் முயற்சி
இந்நிலையில் நாளைய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டு முழுமையாக தொடரை கைப்பற்றவும் 2015-16 வரலாற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. சஹல், நடராஜன் உள்ளிட்டவர்களின் பௌலிங் திறமை இதை சாத்தியப்படுத்தும் என்றும் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்
இந்திய அணியின் பேட்டிங்கிலும் ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வாஷிங்டன் சுந்தரும் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் போன்றவர்கள் காயம் காரணமாக அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.