இந்தியா -ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மெல்போர்னில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அபாரம்
இந்த தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி 4 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுடன் மோதியது. ஆரம்பம் முதலே பௌலிங், பீல்டிங்கில் சொதப்பி, ஆஸ்திரேலியாவிற்கு ரன்களை வாரி வழங்கியது இந்திய அணி. தொடர்ந்து விளையாடிய பேட்டிங்கிலும் இந்தியாவின் துவக்க ரன் ஆர்டரில் இருந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
முன்னாள் கேப்டன் கருத்து
இந்நிலையில், ஹர்மன்பிரீத் கவுர், தொடர்ந்து தான் கேப்டன் பதவியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டிய முக்கிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருப்பதைவிடவும், சிறந்த பேட்ஸ்வுமனாக அவர் அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாந்தா ரங்கசாமி வாழ்த்து
இந்த தொடரில் ஆரம்பம் முதலே இளம் வீராங்கனை ஷெபாலி வர்மா சிறப்பாக விளையாடிவந்ததாகவும், உலக கோப்பை போன்ற முக்கியமான தொடரில் ஜெமிமா, மந்தனா உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகள் சொதப்பியது ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2018 உலக கோப்பை மற்றும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சொதப்பலான ஆட்டத்தை விளையாடியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் கேப்டன் டயானா அறிவுறுத்தல்
இதனிடையே அடுத்ததாக விளையாடவுள்ள முத்தரப்பு போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிரின் பிட்னசை சோதிக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் அவர்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் தெரியவரும் என்றும் அடுத்த ஆண்டு வரவுள்ள சர்வதேச ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக அவர்கள் விளையாட வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு
இதனிடையே தனியா பாட்டியாவை 3வது பேட்ஸ்வுமனாக இறக்கியது தவறு என்றும், அந்த நேரத்தில் அடித்து ஆடக்கூடிய வீராங்கனையை அனுப்பி இருக்க வேண்டும் என்றும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் அரோத்தே தெரிவித்துள்ளார். முதல் ஆறு, ஏழு ஓவர்களில் ரன்களை குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.