ரஞ்சி ட்ராபி போட்டி
2019 - 20 சீசன் ரஞ்சி ட்ராபி தொடர் டிசம்பர் 9 அன்று தொடங்கியது. அன்று மும்பை - பரோடா இடையே ஆன போட்டி வதோதராவில் நடைபெற்றது. மும்பை அணி வலுவான அணியாக இருந்தது.
வலுவான மும்பை அணி
இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்குர் என பிரபல வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்று இருந்தனர். மற்ற வீரர்களும் திறன் வாய்ந்த வீரர்களாக விளங்கினர்.
மும்பை அணி ரன் குவிப்பு
இந்தப் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்க்ஸில் முதலில் பேட்டிங் செய்து 431 ரன்கள் குவித்தது. ப்ரித்வி ஷா 66, ரஹானே 79, ஷாம்ஸ் முலானி 89, ஷர்துல் தாக்குர் 64 ரன்கள் குவித்தனர்.
ப்ரித்வி ஷா அதிரடி
அடுத்து பரோடா அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் 307 ரன்கள் குவித்தது. கேதார் தேவ்தார் 160 ரன்கள் குவித்தார். அடுத்து மும்பை அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடியாக ரன் குவித்தது. ஒருநாள் போட்டி போல ஆடி 66.2 ஓவர்களில் 409 ரன்கள் குவித்தது. ப்ரித்வி ஷா 179 பந்துகளில் 202 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 70 பந்துகளில் 102 ரன்கள் குவித்து மிரட்டினார்.
விக்கெட் வீழ்ச்சி
கடைசி நாள் ஆட்டம் என்பதால் பரோடா எப்படியும் டிரா செய்ய போராடும் என கருதப்பட்டது. எனினும், பரோடா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து வந்தது. 5 விக்கெட் இழந்த நிலையில் யூசுப் பதான் பேட்டிங் செய்ய வந்தார். அணி மோசமான நிலையில் இருப்பதால் அணியைக் காக்க வேண்டிய நிலையில் ஆடினார்.
அந்த பந்து
அப்போது மும்பை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷஷான்க் அட்டார்டே வீசிய பந்தை தடுக்க முயன்றார் யூசுப் பதான். அப்போது பந்து அவரின் நெஞ்சில் அடித்து, கேட்ச் பிடிக்கப்பட்டது.
அவுட் கொடுத்த அம்பயர்
அதற்கு அவுட் கேட்டு முறையிட்டனர் மும்பை வீரர்கள். அம்பயர் முதலில் கொடுக்காவிட்டாலும், மும்பை வீரர்கள் நீண்ட நேரம் அவுட் கேட்கவே அம்பயர் சிறிய தயக்கத்திற்குப் பின் அவுட் கொடுத்தார்.
அம்பயர்கள்
அதைக் கண்டு அதிர்ந்தார் யூசுப் பதான். பந்து நெஞ்சில் தான் பட்டது எனக் கூறி அவர் வெளியேற மறுத்தார். களத்தில் இருந்த இரண்டு அம்பயர்களும் பதான் வெளியேற மறுப்பது குறித்து பேசினர்.
|
ரஹானே வாக்குவாதம்
அப்போது அஜின்க்யா ரஹானே, பதான் அருகே வந்து வெளியேறுமாறு கூறி சில வார்த்தைகளை பேசினார். பதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.
|
படுதோல்வி
பின் மும்பை விக்கெட் கீப்பர் ஆதித்யா தாரே அவர்களை விலக்கி விட்டார். அதன் பின்னரே யூசுப் பதான் களத்தை விட்டு வெளியேறினார். இந்தப் போட்டியில் பரோடா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.