மூத்த வீரர் டிண்டா
அசோக் டிண்டா பெங்கால் மாநில கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆவார். 116 முதல் தர போட்டிகளில் 420 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் டிண்டா. தற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ராபி தொடரிலும் தொடர்ந்து இடம் பெற்று ஆடி வந்தார்.
சண்டை
சமீப காலமாக அவருக்கு பெங்கால் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழு தலைவருடன் கருத்து வேறுபாட்டில் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து பழைய பகையை மனதில் வைத்து பந்துவீச்சு பயிற்சியாளருடன் சண்டை போட்டு நீக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு
சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கான பெங்கால் அணியில் அசோக் டிண்டா அணியில் சேர்க்கப்படவில்லை. அப்போதே தேர்வுக் குழு தலைவருடனும், பயிற்சியாளர் அருண் லாலுடனும் கருத்து வேறுபாட்டில் இருந்துள்ளார் டிண்டா.
பயிற்சிக்கு வர மறுப்பு
அதைத் தொடர்ந்து, ரஞ்சி ட்ராபி தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்காமல் முரண்டு பிடித்துள்ளார். எனினும், அப்போது அணியின் மூத்த வீரர் என்பதால் பலரும் அவர் முரண்டு பிடித்ததை பொறுத்துக் கொண்டனர்.
மோதல் போக்கு
பெங்கால் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ராணாடெப் போஸ், முன்பு அசோக் டிண்டாவுடன் பெங்கால் அணியில் ஒன்றாக ஆடியவர். அப்போதே போஸுடன் மோதல் போக்கை கடைபிடித்து இருக்கிறார் டிண்டா.
என்ன நடந்தது?
இந்த நிலையில், ஆந்திரா அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பெங்கால் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடை மாற்றும் அறையில் பெங்கால் அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் போஸ், இருவரும் அணியின் வீடியோ நிபுணருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.
தாக்கிப் பேசினார்
அப்போது அங்கே வந்த அசோக் டிண்டா, கேப்டனும், பந்துவீச்சு பயிற்சியாளரும் அணியின் அறையில் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என புகார் கூறி, போஸ்-ஐ தாக்கிப் பேசி இருக்கிறார்.
மன்னிப்பு கேட்க மறுப்பு
இந்த விவகாரம் குறித்து அறிந்த பெங்கால் கிரிக்கெட் அமைப்பு, டிண்டாவை, போஸிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறி உள்ளது. அதற்கு மறுத்துள்ளார் டிண்டா. இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாறியது.
அணியின் இருந்து நீக்கம்
பெங்கால் கிரிக்கெட் அமைப்பு இது குறித்து கூட்டம் போட்டு, அசோக் டிண்டாவை பெங்கால் அணியில் இருந்து நீக்கி அதிரடி முடிவு எடுத்துள்ளது. அனேகமாக இனி அசோக் டிண்டா பெங்கால் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.