2வது நாள் போட்டி
86வது ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முதலில் களமிறங்கிய சௌராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் போட்டி நடைபெற்றது.
அம்பயர் சம்சுதீன் காயம்
முதல் நாள் ஆட்டத்தின்போது அம்பயர் சம்சுதின் மீது பந்து வந்து வேகமாக மோதியதால் அவர் காயமடைந்தார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இன்றும் அவர் பீல்டுக்கு வரவில்லை. சரி இன்னொரு அம்பயரைப் போடலாம் என்றால் அம்பயர் ரவி மட்டுமே பாக்கி இருந்தார். அவரும் டிஆர்எஸ் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்.
அனந்தபத்மநாபனே இரு முனை அம்பயர்
இதையடுத்து வேறு வழியில்லாமல் அனந்தபத்மநாபனே இரு முனைகளிலும் அம்பயராக பணியாற்ற நேரிட்டது. சம்சுதினுக்குப் பதில் புதிய அம்பயராக யஷ்வந்த் பார்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீதமுள்ள போட்டி நாட்களில் பணியாற்றவுள்ளாராம். வழக்கமாக ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் 2 அம்பயர்கள்தான் பணியில் இருப்பார்கள்.
கூடுதல் அம்பயர் நியமிக்கப்படவில்லை
ரஞ்சி போட்டிகளில் மேட்ச் ரெப்ரீயே 3வது அம்பயராகவும் பணியாற்றுவார். ஆனால் டிவி ஒளிபரப்புகளின்போது கூடுதலாக ஒரு அம்பயரை நியமிப்பார்கள். ஆனால் இந்த முறை என்ன குழப்பமோ கூடுதல் அம்பயர் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பிட்ச் சரியில்லை என்று பெங்கால் அணி கடுப்புடன் உள்ளது. பிட்ச்சா இது என்று அவர்கள் காரித் துப்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இப்படி அம்பயருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கங்குலியிடம் சொல்லியும் புண்ணியம் இல்லை
இந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணமே செளராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் குளறுபடியான ஏற்பாடுகளே என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால் கங்குலியிடம் என்ன புகார் கூறுவது என்று ஏற்கனவே பெங்கால் அணி கோச் அருண் லால் சலிப்புடன் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.