பஞ்சாப் - டெல்லி போட்டி
பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையே ஆன ரஞ்சி ட்ராபி தொடரின் எலைட் குரூப் ஏ பிரிவு போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
கேட்ச்
துவக்க வீரராக வந்த சன்விர் சிங் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் 10 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி பந்துவீச்சாளர் சுபோத் பாத்தி பந்துவீச்சில் எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டார்.
வெளியேற மறுப்பு
கள அம்பயர் இதற்கு உடனடியாக அவுட் கொடுத்தார். ஆனால், எட்ஜ் ஆகவில்லை என உறுதியாக இருந்த ஷுப்மன் கில், களத்தை விட்டு வெளியேற மறுத்தார். கள அம்பயருடன் அவர் வாக்குவாதம் செய்தார். அவர் அம்பயரை திட்டினார் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.
தீர்ப்பை மாற்றினார்
பின்னர் ஸ்கொயர் லெக் அம்பயரிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் ஷுப்மன் கில் அவுட் இல்லை என தீர்ப்பை மாற்றினார் அம்பயர். ஒரு வீரர் அழுத்தம் கொடுத்து அம்பயர் தீர்ப்பை மாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிதிஷ் ராணா எதிர்ப்பு
இதைக் கண்ட டெல்லி அணி துணை கேப்டன் நிதிஷ் ராணா அம்பயரிடம் "ஏன் தீர்ப்பை மாற்றினீர்கள்?" எனக் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லி அணி அப்போது களத்தை விட்டு வெளியேறப் போகும் முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேட்ச் ரெப்ரீ தலையீடு
பின்னர், மேட்ச் ரெப்ரீ பி. ரங்கநாதன் தலையிட்டு அம்பயர், வீரர்கள் இடையே ஆன வாக்குவாதத்தை முடித்து வைத்தார். ஷுப்மன் கில் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
நடவடிக்கை
சண்டை போட்டு தன் விக்கெட்டை காப்பாற்றிய ஷுப்மன் கில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அம்பயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது விதிப்படி குற்றம் என்பதால் போட்டி முடிந்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி அணி விளக்கம்
இது குறித்து டெல்லி அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லி அணி களத்தை விட்டு வெளியேறவில்லை என்றும், அம்பயர் ஏன் தீர்ப்பை மாற்றினார் என்பது பற்றி மட்டுமே துணை கேப்டன் கேட்டு அறிந்தார் என்றும் கூறி உள்ளனர்.
புகார் இல்லை
இந்த விவகாரத்தில் மேட்ச் ரெப்ரீ தலையிட்ட பின் தான் போட்டி தொடர்ந்து நடந்துள்ளது. அதனால், டெல்லி அணி மேட்ச் ரெப்ரீயிடம் தீர்ப்பு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து புகார் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி அணி புகார் அளிக்கப் போவதில்லை என கூறிவிட்டது.
மோசமான பெயர்
இந்தியா ஏ அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ஷுப்மன் கில், இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு பெற்று வருகிறார். இந்த நிலையில், அம்பயருடன் வாக்குவாதம் செய்து மோசமான பெயரை எடுத்துள்ளார்.