ரஷீத் கான், நபி நிலைமை?
தலிபான்களுடனான ஒப்பந்தத்தின்படி இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தலிபான்களின் கை ஆப்கானிஸ்தானில் ஓங்கியுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள், முக்கிய மாகாண தலைநகரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் வேகமாக கைப்பற்றின. இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் ரஷீத் கான் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காவும் விளையாடி வருகின்றனர்.
போட்டியில் விளையாடுவார்கள்?
இந்நிலையில், ஆப்கன் வீரர்களின் பாதுகாப்பில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருவதாக தருகிறது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போதே எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், ரஷீத் கான் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் ஐபிஎல்டி20 தொடரில் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்" என கூறியுள்ளதாக தி ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் நடந்துவரும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 21-ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் ரஷீத் கான், முகமது நபி இருவரும் தங்களின் குடும்பத்தினரைச் சந்திக்க ஆப்கானிஸ்தான் செல்வார்களா அல்லது ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவார்களா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஐபிஎல் தொடரில் ரஷீத் மற்றும் நபி ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சன் ரைசர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம், "இரண்டு ஆப்கன் வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருப்பார்கள். "தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் இதுவரை பேசவில்லை, ஆனால் அவர்கள் போட்டியில் விளையாடுவார்கள்" என்று கூறியுள்ளார்.
வேதனை ட்வீட்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அடையாளம் ரஷீத் கான் எனலாம். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தங்கள் நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் எப்போதும் அக்கறை செலுத்துபவர் ரஷீத் கான். காரணம், அவர் சிறு வயதில் இருந்தே குண்டு சத்தங்களுக்கு இடையே வாழ்க்கையை நடத்தியவர். அதனால் அந்த வலி, வேதனை, பயம் அவருக்கு தெரியும். ஆப்கானிஸ்தானின் அடுத்த சந்ததியும் இந்த நிலைமைக்கு ஆளாகக் கூடாது என்பதே அவரது நோக்கம். இதனால், அவர் ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "உலகத் தலைவர்களே, என் நாடு பெரும் பிரச்னையில் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தினம் கொல்லப்படுகிறார்கள். வீடுகளும், உடைமைகளும் அழிக்கப்படுகின்றன. ஆயிரமாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. எங்களை இப்படி சிக்கலில் தவிக்கச் செய்யாதீர்கள். ஆப்கன் மக்களைக் கொல்வதையும், ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்கு அமைதி தேவை" என்று சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.
நிதியுதவி
அதுமட்டுமல்லாமல், தன் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கடந்த ரம்ஜானின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் 9,461 பவுண்டுகள் crowd funding மூலம் திரட்டப்பட்டது. அதன்மூலம் 5 மாகாணங்களிலுள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் போரினால் ஆப்கானிஸ்தான் பெரும் சிக்கலை சந்தித்து வருவதால் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கியிருக்கிறார். ஆப்கன் கிரிக்கெட் சங்கத்தோடு கைக்கோர்த்து இந்த நிதி திரட்டலை முன்னெடுத்து இருக்கிறார்.
தவிக்கும் ரஷீத்
இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரஷீத் கான் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து கவலைப்படுவதாகவும், அவரால் தனது குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பீட்டர்சன் கூறுகையில், "நாங்கள் நீண்ட நேரம் இதுகுறித்து உரையாடினோம், குடும்பத்தை பற்றி அவர் கவலைப்படுகிறார்: அவர் தனது குடும்பத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற முடியவில்லை" என்று அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியுள்ளார்.