தொடர் குழப்பம்
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள், தாங்கள் எந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறோம் என்பதில் தெளிவான முடிவுடன் பட்டியலை இறுதிசெய்துவிட்டது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மட்டும் வீரர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
மோசமான ஆண்டு
ஐதராபாத் அணிக்கு கடந்த சீசன் சற்று மோசமாக அமைந்தது. கோப்பை வென்றுக்கொடுத்த கேப்டனான டேவிட் வார்னரிடம் இருந்து பதவியை பறித்துக்கொண்டு வெளியே உட்காரவைத்தது. இதன்பின்னர் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு தட்டுத்தடுமாறி தொடரை முடித்தது. எனவே அடுத்தாண்டு சிறப்பான கம்பேக் கொடுப்பதற்காக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தக்கவைக்கப்போகும் வீரர்
அதற்காக கேப்டன் வில்லியம்சனை முதன்மை தேர்வாக தக்கவைத்துள்ளது. அவருக்கு ரூ.16 கோடி ஊதியமாக வழங்கப்படும். டேவிட் வார்னர் அநேகமாக கழட்டிவிடப்படுவார் என்பதால் ரஷித் கானை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
நிபந்தனை
உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கும் ரஷித் கான், இந்த முறை தன்னை முதல் வீரராக தேர்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். ஏனென்றால் முதல் வீரருக்கு ரூ.16 கோடி ஊதியமும், 2வது வீரருக்கு ரூ.12 கோடி ஊதியமும் கொடுக்கப்படும். எனவே ஊதியம் போதாது என்ற காரணத்தால் தன்னை முதல் வீரராக தேர்வு செய்ய கோரியுள்ளார். ஆனால் இதற்கு ஐதராபாத் அணி ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
கடும் பின்னடைவு
இந்த விவகாரத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து வில்லியம்சன் பக்கமே நிற்பதால் அதிருப்தியில் ரஷித் கான், அணியில் இருந்து விலகவுள்ளதாக தெரிகிறது. ரஷித் கான் போன்ற பந்துவீச்சாளர் ஏலத்திற்கு சென்றால் பல கோடி ரூபாய் கொடுத்தாவது அவரை ஏலம் எடுத்துவிடும். இது ஐதராபாத் அணிக்கு பின்னடைவாக போகும் என்பது உறுதி. ஐபிஎல் தொடரில் இதுவரை ரஷித் கான் 76 போட்டிகளில் 93 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.