ஜடேஜா காயம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அடித்த பந்து பட்டதில் இடது கட்டைவிரலில் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் 6 வாரங்களுக்கு ஓய்பு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேவை ஏற்பட்டால் விளையாடுவார்
3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா 28 ரன்களையும் எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது காயம் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆயினும் தேவை ஏற்படும் பட்சத்தில் வலி நிவாரணி ஊசி போட்டுக் கொண்டு அவர் விளையாடுவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2 டெஸ்ட்களில் பங்கேற்க மாட்டார்
இந்நிலையில் வரும் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ள இங்கிலாந்து -இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி உட்பட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டியில் காயம் ஏற்பட்டுள்ள ரிஷப் பந்த் விளையாடுவார் என்று ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தொடரும காயங்கள்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வடிவங்களில் விளையாடப்பட்டு வரும் இந்த தொடர்களில் இந்திய வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதியுற்று தொடர்களில் இருந்து வெளியேறுவது தொடர்ந்து வருகிறது. உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் காயங்களால் நாடு திரும்பியுள்ள நிலையில், கேஎல் ராகுலும் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் வெளியேறியுள்ளார்.