அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இறுதி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அகமதாபாத்தின் மோதேரா மைதானத்திலேயே 5 டி20 போட்டித் தொடரும் நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜடேஜா, பாண்டே, சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளுக்கிடையில் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரும் மோதேரா மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக பிட்டாகாத நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெறவில்லை. இதேபோல ஜஸ்பிரீத் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பெறவில்லை. மாறாக டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் 12ம் தேதி டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.