லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அப்போட்டியில் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. குல்தீப் யாதவை அணியில் சேர்த்தது தவறான முடிவு என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் லார்ட்ஸ் ஆடுகளம் முழுவதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக அமைந்தது.இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை நாட்டிங்காமில் தொடங்குகிறது. அதற்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது. நேற்றைய பயிற்சிக்கு பின் ரவி சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது, குல்தீப் யாதவை அணியில் சேர்த்தது தவறு தான். நாங்கள் மற்றுமொரு வீக்கப்பந்துவீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும். ஒரு வேளை அது இந்திய அணிக்கு உதவி இருக்கலாம் என்றார்.ஆனால் ரவி சாஸ்திரி, விராட் கோஹ்லியை போன்றே குல்தீப் யாதவின் சேர்க்கையை சரி செய்ய முயன்றார். அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ஒரு வேளை மழை அதிகமாக பொழிந்து கடைசி நாளில் பந்து சுழன்று திரும்பி இருந்தால் அவர் தேவைப்படுவார் என்று நினைத்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று கூறினார்.போட்டிக்கு முதல் நாள் வரை இரண்டு அணிகளும் கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை களமிரக்க திட்டமிட்டது. ஆனால் மழையின் காரணமாக இங்கிலாந்து வோக்ஸை அணியில் எடுத்தது. அவரே இந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.