பிடிவாதம்
அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது கேப்டன் கோலி பிடிவாதம் பிடித்து தனக்கு பிடித்த ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக கொண்டு வந்தார் என்ற பேச்சு உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியில் பல்வேறு முக்கிய முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடும் விமர்சனம்
இவர்களின் தலைமையில் இந்தியா பல்வேறு வெற்றிகளை குவித்து இருந்தாலும், முன் எப்போதும் இல்லாத அளவு கடும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. குறிப்பாக, வீரர்களை மனம் போன போக்கில் போட்டிக்கு போட்டி மாற்றிக் கொண்டு இருக்கும் இவர்களது செயல் பல முறை விவாதத்துக்கு உள்ளானது.
ரசிகர்கள் ஏமாற்றம்
எனவே, ரசிகர்கள் பலர் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி இருக்கும் வரை இந்தியா உலகக்கோப்பை வெல்லாது என கூறி வருகின்றனர். இந்நிலையில், ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அதற்கு பின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பயிற்சியாளர்
எனினும், அப்போது ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். அதே சமயம், அவரது ஒப்பந்தம் நேரடியாக நீட்டிக்கப்படாது என கூறப்படுவதால், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ வட்டாரம் விரும்புவதாக தெரிகிறது.
நீக்க வேண்டும்
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் செயல்பாடு தான் இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா குறைந்தபட்சம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், ரவி சாஸ்திரியை பதவியை விட்டு நீக்க வேண்டும்.
குழப்பம்
காரணம், அந்த அளவு ரவி சாஸ்திரி - கோலி கூட்டணி இந்திய அணியின் அமைப்பை குழப்பி வைத்துள்ளனர். தொடருக்கு தொடர் வீரர்களை மாற்றியது, சிறிய அணிகள் தொடர் என்றால் கோலி ஓய்வு எடுத்துக் கொள்வது, 2-3 போட்டிகளில் ஆடவில்லை என்றால் பார்ம் அவுட் என கூறுவது, பிடித்த வீரர்கள் என்றால் பார்ம் அவுட் ஆக இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பளிப்பது என்பன போன்ற விசித்திர முயற்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு எரிச்சலை தான் கொடுத்துள்ளது.
ரசிகர்களின் வேண்டுகோள்
இந்தியா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும். ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற திறமை வாய்ந்த முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அப்படியே கேப்டனை மாற்றினாலும், நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்!!