சமூக இடைவெளி
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவரது பயிற்சியின் கீழ் இந்தியா தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. முதலில் தோனியுடனும் தற்போது விராட் கோலியுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறார் சாஸ்திரி. இந்த நிலையில் பார்க் ஒன்றில் ஐந்து நாய்களுடன் அவர் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுவும் சமூக இடைவெளியுடன் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சாஸ்திரியும் நாய்களும்
ரவி சாஸ்திரிக்கு முன்பாக அந்த ஐந்து நாய்களும் நல்ல இடைவெளி விட்டு அமர்ந்துள்ளன. அவர் என்னமோ பேசிக் கொண்டிருக்கிறார். அதை அவர்கள் உன்னிப்பாக காதை விரித்துக் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தைப் போட்டுள்ள ரவி சாஸ்திரி, ஐசிசி விதிப்படி சமூக இடைவெளியுடன் நடந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம். லேசாக மழை தூறியதால் கேப்டன் மட்டும் வெளியேறி விட்டார். மைதானத்தின் நிலையைப் பார்வையிட அவர் போயுள்ளார் என்று கூறியுள்ளார்.
நாய்களும் வீரர்களும் ஒன்னா?
இந்த புகைப்படம் கலவையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. சிலர் அதெப்படி நாய்களை வைத்து டீம் மீட்டிங் என்று சாஸ்திரி சொல்லலாம். அதுவும் கேப்டன் மைதானத்தைப் பார்வையிடப் போயுள்ளார் என்றும் சொல்லிருக்காரே.. வீரர்களை எப்படி நாய்களுடன் அவர் ஒப்பிடலாம் என்று கோபித்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் பலரும் இந்த புகைப்படத்தை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
1984 போட்டி
கடந்த மாதமும் இதேபோல ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார் சாஸ்திரி. அதில், 1984ம் ஆண்டு மும்பை வாங்கடே மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் சதம் அடித்தபோது விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் அடித்த முதல் டெஸ்ட் சதம், அதுவும் சொந்த மண்ணில், அதுவும் எனது பெற்றோர் பார்க்க எடுத்த மகிழ்ச்சியான தருணம் என்று அதில் சாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.
142 ரன்கள்
அந்தப் போட்டியில் 323 பந்துகளைச் சாப்பிட்டு விட்டு 142 ரன்களை எடுத்தார் சாஸ்திரி. அதில் ஒரே ஒரு சிக்ஸர்தான் பறந்தது. 17 பவுண்டரிகளும் அடித்தார். அப்போட்டி இங்கிலாந்துக்கு எதிராக நடந்தது. அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியும் பெற்றது. இதைத்தான் அந்தப் புகைப்படம் மூலமாக குறிப்பிட்டிருந்தார் ரவி சாஸ்திரி.
கோலியாலேயே முடியாதாம்
அத்தோடு நிற்காத சாஸ்திரி, 1985ல் இருந்த அணி சூப்பரான கிளாஸ் ஆன அணி. இப்போது விராட் கோலியின் தலைமையிலான அணிக்கு கூட சரியான சவாலைத் தரக் கூடியது என்றும் பெருமிதமாக கூறியிருந்தார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்னு தெரியலை.. ஆனால் அவர் சொன்ன அந்த 85 அணி சக மும்பைக்காரரான சுனிஸ் கவாஸ்கர் தலைமையில் செயல்பட்ட அணியாகும். அந்த அணி கிரிக்கெட் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நினைவிருக்கலாம். ஆனால் கபில்தேவ் தலைமையில்தான் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.