தற்காலிகமாக வந்த ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மட்டுமே இருந்த நிலையில், 2007ஆம் ஆண்டு இந்திய அணி மோசமான நிலையில் இருந்த போது தற்காலிக மானேஜராக நியமிக்கப்பட்டார் ரவி சாஸ்திரி. அப்போது இந்திய அணி 2007 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தது.
புதுப்பிக்க வேண்டிய கட்டாயம்
கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த நேரம் அது. அவரை உடனடியாக நீக்கி விட்டு, இந்திய அணியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தான் அணியின் தற்காலிக மானேஜராக நியமிக்கப்பட்டார் ரவி சாஸ்திரி.
பதவி வேண்டாம் என்றார்
அப்போதே ரவி சாஸ்திரி அடுத்த பயிற்சியாளர் ஆவார் என கூறப்பட்டது. ஆனால், வர்ணனை செய்வது தான் பிடித்தமானது என்று கூறி பயிற்சியாளர் பதவியை புறம் தள்ளினார் ரவி சாஸ்திரி.
மீண்டும் வந்தார்
அதன் பின் 2014இல் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை மோசமாக தோற்ற போது அணியை மீட்டு எடுக்க மீண்டும் அழைக்கப்பட்டார் ரவி சாஸ்திரி. இந்த முறையும் மானேஜர் என்ற பதவியில் தான் இருந்தார். ஆனால், பயிற்சியாளர் போல நடந்து கொண்டார்.
கோலியின் வளர்ச்சி
2016இன் துவக்கம் வரை அணியில் மானேஜராக இருந்த ரவி சாஸ்திரி அணியை மாற்றி அமைத்ததோடு, விராட் கோலியின் வளர்ச்சியில் பெரிய பங்கு வகித்தார். இந்த காலத்தில் தான் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என கூறப்படும் அளவுக்கு சாதனைகள் செய்யத் துவங்கினார்.
ஏன் பிடிக்காமல் போனது?
2007 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இந்திய அணி சரிவில் இருந்த போது அணியை மீட்டு எடுத்தவர் ரவி சாஸ்திரி தான். ஆனால், 2017இல் அனில் கும்ப்ளேவை திட்டம் போட்டு தூக்கி விட்டு, இவரை பயிற்சியாளராக அழைத்து வந்தது தான் பல இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.
முகம் சுளிக்க வைத்தது
மேலும், வெளிநாட்டு தொடர்களின் போது பல முறை சரக்கும், கையுமாக போட்டிக்கு இடையிலேயே ரவி சாஸ்திரி இருந்ததும் பலரை முகம் சுளிக்க வைத்தது. அவரது அணித் தேர்வுகளும் பல முறை சர்ச்சைக்கு உள்ளானது. எனினும், இந்திய அணி வெற்றிகளை குவிக்கத் தவறவில்லை.
என்ன தவறு?
இரண்டு முறை அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றியதோடு, இந்திய அணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக வழிநடத்தி வரும் ரவி சாஸ்திரிக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவி கொடுத்ததில் என்ன தவறு என கேட்கிறார்கள் "அவரது ரசிகர்கள்".