தலைமை பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டு அவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரின் தற்ப்போதைய பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து ரசிகர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ரசிகர்கள் அதிருப்தி
ரவிசாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. அரையிறுதிப்போட்டி, அல்லது இறுதிபோட்டி வரை சென்று பதற்றம் காரணமாக தோல்வியடைகிறது. எனவே ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்கக்கூடாது எனத்தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ கடிதம்
இந்நிலையில், பயிற்சியாளராக நீடிக்கவில்லை என ரவி சாஸ்திரி மறைமுகமாக தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணி டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என பிசிசிஐ அவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் அதற்கு ரவி சாஸ்திரி ஒப்புக்கொள்ளவில்லை.
ரவிசாஸ்திரி முடிவு
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் நான் பதவி விலகுகிறேன் என்றும், தொடர்ந்து நீடிக்க விருப்பம் இல்லை எனத்தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ராகுல் டிராவிட் தான் அடுத்த பயிற்சியாளராக இருப்பார் எனக்கூறப்படுகிறது.
வயது வரம்பு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் அதிகபட்ச வயதுவரம்பு 60 வயதுவரை மட்டுமே. ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.