ரவி சாஸ்திரி பதவி காலம்
ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் 2014 முதல் 2016 வரை அணியின் இயக்குனராக இருந்தார். அவரது பதவிக் காலம் 2019 உலகக்கோப்பை தொடருடன் நிறைவு பெறுகிறது.
புதிய பயிற்சியாளர்
இந்த நிலையில், ரவி சாஸ்திரி மீது தொடர்ந்து விமர்சனம் கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறைகளை துவக்கியது பிசிசிஐ. ரவி சாஸ்திரி உட்பட பல முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு
புதிய விதிமுறைகளின்படி பார்த்தால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. குறைந்தபட்சம் இரண்டு வருடம் டெஸ்ட் அந்தஸ்து உள்ள அணிக்கோ அல்லது மற்ற அணிகள், உள்ளூர் அணிகளுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என ஒரு விதி உள்ளது.
வாய்ப்பு இல்லை
இதன்படி பார்த்தால், இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. ஐபிஎல் அணிகள் முதல் பிற அணிகள் வரை மிகக் குறைந்த இந்தியர்களே பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். ராகுல் டிராவிட் வேண்டுமானால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்கலாம். அவர் இந்தியா ஏ அணிக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
ரவி சாஸ்திரிக்கு சாதகமா?
ரவி சாஸ்திரி இதற்கு முன்பு பயிற்சியாளராக நியமிக்கப்படும் போது இதே விதிமுறைகள் இருந்திருந்தால், அவரால் பயிற்சியாளராக ஆகி இருக்க முடியாது. ஆனால், இப்போது உள்ள விதிமுறைகள், தகுதிகள் சரியாக ரவி சாஸ்திரிக்கு பொருந்துகிறது.
திரைமறைவு வேலைகள்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அமர வைக்க திரைமறைவு வேலைகள் நடந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. இந்திய ரசிகர்கள் பலரும் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.