மும்பை: உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ரவி சாஸ்திரியே அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2017ம் ஆண்டு இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்த அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உலக கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைந்தது.
பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக் காலமும் உலக கோப்பையுடன் முடிவடைந்தது. உலக கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோரை கேள்வி கணைகளால் துளைக்க பிசிசிஐ தயாராக உள்ளது. அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் உடனான தொடர் நடைபெறுவதையடுத்து அவரின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிடுகிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு விரைவில் கூடுகிறது. அதில் இந்திய அணியின் உலக கோப்பை தொடரில் நிகழ்ந்த அரையிறுதி தோல்வி குறித்து விவாதிக்கப்படுகிறது.