பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி கொள்ள இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், இந்த போட்டி இந்திய அணிக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
39 ஆண்டுகளுக்கு முன்னால்
இந்நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1981ம் ஆண்டில் இதே பிப்ரவரி 21ம் தேதி இதே வெல்லிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட அனுபவத்தை இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அவரை சத்தீஸ்வர் புஜாரா பேட்டி எடுத்து அவரது மலரும் நினைவுகளை கேட்டறிந்தார்.
முதல் டெஸ்ட் போட்டி
39 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணியில் ரவி சாஸ்திரி இடம்பெற்றிருந்தார். முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் நியூசிலாந்து வந்த அவர், அடுத்த நாள் காலையில் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். அந்தப் போட்டியில் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர், டாசில் தோற்று, இந்திய அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்ததாகவும் , ஆனால், கடுமையான காற்றால் அந்த போட்டி பாதிக்கப்பட்டதாகவும் ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்தார்.
6 விக்கெட்டுகள் அவுட்
தன்னுடைய அந்த முதல் டெஸ்ட் போட்டியின் துவக்கத்தில் தான் மிகவும் பதற்றத்துடன் தயங்கி தயங்கி விளையாடியதாக குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, தன்னுடைய முதல் போட்டி என்பதால் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். பிறகு நியூசிலாந்து வீரர் ஜெர்மி கோனியின் விக்கெட்டை முதலில் எடுத்தபின்பு தன்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் அவர் மேலும் கூறினார். இதையடுத்து அந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சேர்த்து தான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும் குறிப்பிட்டார்.
எதுவும் மாறவில்லை
நியூசிலாந்தின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் எதுவும் மாறவில்லை என்று தெரிவித்த ரவிசாஸ்திரி அதே மைதானம் மற்றும் அதே டிரசிங் அறை தற்போதும் காணப்படுவதாக கூறினார். அதே மைதானத்தில், அதே இடம் மற்றும் அதே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் மீண்டும் பங்குபெறுவேன் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
|
பாலி உம்ரிகர் ஸ்வெட்டர்
வெல்லிங்டனில் மிகவும் குளிர்ந்த வானிலை நிலவியதாகவும் குளிர்ந்த காற்று அதிகளவில் வீசியதாகவும் தெரிவித்த ரவி சாஸ்திரி, இந்தியா உள்ளிட்ட மற்ற இடங்களில் இல்லாதவகையில் குளிர்காற்று வீசியதாக குறிப்பிட்டார். அந்த நேரத்தில் மறைந்த முன்னாள் வீரர் பாலி உம்ரிகரின் ஸ்வெட்டர் தனக்கு கைகொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.