இருவருக்கு சிக்கல்
ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்த கபில் தேவ் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் இரட்டை ஆதாயம் தொடர்பான விதியில் சிக்கி உள்ளனர். சாந்தா ரங்கசாமி கூட இதில் தப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கபில் தேவ் பதவி விதிகளின் படி செல்லாது என கூறப்படுகிறது.
தலைமை ஆலோசனை குழு
பயிற்சியாளரை தேர்வு செய்ய தலைமை ஆலோசனை குழு என்ற குழுவை அமைத்துள்ளது பிசிசிஐ. தற்போது உள்ள விதிகளின் படி அந்த குழு தான் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.
தலைவர் கபில் தேவ்
அந்த குழுவில் கபில் தேவ், அன்ஷுமன் கெயிக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவிற்கு கபில் தேவ் தான் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி நியமனம்
இந்த மூவர் குழு தான் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக டபுள்யூ.வி.ராமன் மற்றும் ஆடவர் அணி தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி ஆகியோரை நியமித்தது. இந்த இரண்டு நியமனங்களுகும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
முரணான விதிகள்
பிசிசிஐ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன் படி, பிசிசிஐ-யில் ஒரு பதவியில் இருக்கும் ஒருவர் ஆதாயம் பெறும் வகையில் மற்றொரு பதவியில் இருக்கக் கூடாது. இந்த விதியின் படி பார்த்தால், பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ அதிகாரத்திற்குள் நுழையவே முடியாது.
பிசிசிஐ அதிகாரி
இந்த விதியை சுட்டிக் காட்டி பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின் என்பவர் கபில் தேவ், சாந்தா ரங்கசாமி, அன்ஷுமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இவர்களில் அன்ஷுமன் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
சாந்தா ரங்கசாமி ராஜினாமா
சாந்தா ரங்கசாமி இந்த நோட்டீஸ் வந்த உடன் ஆலோசனை குழு உறுப்பினர் பதவி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் இயக்குனர் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்து இருக்கிறார்.
கபில் தேவ் நிலை
கபில் தேவ் நிலை தான் கொஞ்சம் சிக்கல். அவர் வர்ணனையாளர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் உறுப்பினர் மற்றும் கிரிக்கெட் மைதான மின்விளக்கு நிறுவனம் என மூன்று ஆதாயங்களை கொண்டுள்ளார். அதனால், அவரது தலைமை ஆலோசனை குழு பதவி செல்லாது.
ரவி சாஸ்திரிக்கு ஆபத்து
இந்த இடியாப்ப சிக்கலில் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு பெரிய இழப்பு ஏதும் ஏற்படப் போவதில்லை. ஆனால், ரவி சாஸ்திரி நியமனம் செல்லாது என கூறப்படும் பட்சத்தில் அவர் பதவி இழக்க நேரிடும்.
மீண்டும் நியமனம்
அவர் 2021 டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம் செல்லாத பட்சத்தில், புதிய தலைமை ஆலோசனை குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தான் அவரை மீண்டும் நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.