ஏமாந்த ரசிகர்கள்
ஆனால், இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததில் பாதியை கூட நிறைவேற்றவில்லை. ரோஹித் தொடங்கி, ஜடேஜா வரை யாருமே இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியதாக தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூட போராடவில்லை என்பதே இங்கு வருத்தமான விஷயம். இப்படி விளையாடுவதற்காகவா, இவ்வளவு சிரமப்பட்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதிரடியாக ஆடும் ரிஷப் பண்ட்டால் கூட இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த போது கூட ஒன்றுமே செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
வேதனையின் உச்சம்
எனினும், உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் பல ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. குறிப்பாக, 2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், மேட்ச் டிராவாகி, இரண்டு முறை நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவாகி, புரியாத புதிர் கணக்கில் இங்கிலாந்திடம் கோப்பையை நியூசிலாந்து பறிகொடுத்தது எல்லாம் வேதனையின் உச்சம்.
கருத்து மோதல்கள்
அந்த வகையில், நியூசிலாந்து இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றதை இந்திய ரசிகர்களே மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர். ஆனால், மைதானத்தில் சில நியூசிலாந்து ரசிகர்கள் தான் இந்திய வீரர்களை அவமதிக்கும் வகையில் சில சம்பவங்களில் ஈடுபட்டனர். அநாவசிய வார்த்தைகள், கருத்து மோதல்கள் என அவ்வப்போது சில சம்பவங்களை நாம் பார்க்க நேரிட்டது.
மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
இந்நிலையில், நியூசிலாந்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று பதிவிட்ட ட்வீட் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது ட்வீட்டில், "சிறந்த அணி வெற்றிப் பெற்றுள்ளது. உலகக் கோப்பைக்கான நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு தகுதியான வெற்றியாளர்களாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. மாபெரும் சாதனைகள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. நன்றாக விளையாடினார்கள். மரியாதை அளிக்கிறேன்" என்று நறுக்கென்று ட்வீட் செய்துள்ளார்.
பெரும் வரவேற்பு
இதற்கு இந்திய ரசிகர்களைத் தாண்டி, நியூசிலாந்து ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.வெறும் வாய் வார்த்தைக்காக வாழ்த்து தெரிவிக்காமல், நியூசிலாந்து அணியின் கடந்த கால துயரங்களையும், போராட்டங்களையும் குறிப்பிட்டு ரவி சாஸ்திரி வாழ்த்தியது உண்மையில் அவரது மெச்யூர்டான குணத்தை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.