பயிற்சியாளர் தேர்வு
உலகக்கோப்பை முடிந்த நிலையில், தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் பிற உதவி பயிற்சியாளர்களின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு 45 நாட்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை துவங்கி உள்ளது. பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
மாற்றம் இருக்காது
இந்த நிலையில், ரவி சாஸ்திரியை மாற்ற மாட்டார்கள். அதற்கு காரணம் விராட் கோலி தான் என ஒரு பிசிசிஐ அதிகாரி தகவல் கூறி இருக்கிறார். இது பெரும் ஆச்சரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பிசிசிஐ-யில் என்ன தான் நடக்கிறது என்ற குழப்பத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
காரணம் என்ன?
இதற்கு அவர் கூறும் காரணம் இது தான். விராட் கோலி - ரவி சாஸ்திரி இருவரும் ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து, சுமூகமாக செல்கின்றனர். அணியில் பாதியாக இருக்கும் பயிற்சியாளர்களை அப்படியே மாற்ற முடியாது என்று கூறினார் அந்த அதிகாரி.
திட்டங்கள் எல்லாம் மாறும்
மேலும், இப்போது பயிற்சியாளரை மாற்றினால் அது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தை மாற்றி அமைப்பதாக இருக்கும். வீரர்கள் புதிய பயிற்சியாளருக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கேப்டனாக கோலியின் வளர்ச்சிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது முக்கியம் என கூறினார்.
கோலியின் கை இருக்கிறதா?
சுற்றி வளைத்து கேப்டன் விராட் கோலிக்கு பிடித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற முடியாது என்கிறார் அந்த அதிகாரி. பயிற்சியாளர் தேர்வில் முன்பு போல இப்போதும் கோலி தலையிடுகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது அந்த அதிகாரியின் பேச்சு.
அப்புறம் ஏன் பயிற்சியாளர் தேர்வு?
ரவி சாஸ்திரியை மாற்றப் போவதில்லை என்றால் எதற்காக ஒரு குழு அமைத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய விண்ணப்பம் பெற்று வருகிறார்கள். எத்தனை பேருடைய நேரம் இதில் வீணாகும்? பிசிசிஐ-யில் பெரிய அளவில் கேலிக் கூத்து நடந்து வருகிறது என்பது தான் உண்மை.