இந்திய அணியில் இடம்பெறும் திறவுகோல்
இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் நாடெங்கிலும் 38 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்திய அணியில் இடம்பெறும் கனவுடன் விளையாடிவரும் இளம் வீரர்களுக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் இந்தத் தொடரில் இடம்பெற்று தங்களது திறமையை பல வீரர்கள் வெளியுலகிற்கு பறைசாற்றி வருகின்றனர். பல வீரர்கள் தங்களது குறிப்பிடத்தக்க சாதனைகளால் கவனம் பெற்று வருகின்றனர்.
இந்தூரில் நடைபெறும் போட்டி
இந்திய அணியின் போட்டிகள், ஐபிஎல்லுக்கு பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக விளங்கிவரும் ரஞ்சிக் கோப்பை தொடருக்கென பிரத்யேக ரசிகர்கள் நாடெங்கிலும் காணப்படுகின்றனர். இந்த தொடரின் போட்டிகளில் பல்வேறு அணிகள் மோதிவரும் நிலையில் இந்தூரில் நேற்று துவங்கியுள்ள மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு இடையிலான போட்டி சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது.
முதல் போட்டி... முதல் ஓவரில் ஹாட்ரிக்
இந்த போட்டியில் மத்திய பிரதேச அணி சார்பில் முதன்முதலில் களமிறங்கிய ரவி யாதவ் கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை இடம்பெற செய்துள்ளார். தன்னுடைய முதல் ரஞ்சி போட்டி மற்றும் முதல் ஓவரிலேயே இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் போட்டி முதல் ஓவரிலேயே எதிரணியினரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இவர் தன்னுடைய இருப்பை தேர்வாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அணியின் வெற்றிக்கு காரணமான ரவி யாதவ்
முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 230 ரன்களுக்கு ஆட்டத்தை முடிவு செய்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய உத்தரபிரதேச அணியின் துவக்க வீரர் உள்பட மூவரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார் ரவி யாதவ். இவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் உத்தரபிரதேச வீரர்கள் ஆரியன் ஜூயல், அங்கித் ராஜ்பூத் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளாக அவுட் ஆகினர்.
பிசிசிஐ பாராட்டி வீடியோ வெளியீடு
இந்தூரின் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தை எதிர்த்து மத்திய பிரதேச அணி சார்பில் விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ், தன்னுடைய ரஞ்சி தொடரின் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரின் இந்த சாதனையை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரவி யாதவ்
இதனிடையே இரண்டாவது நாள் போட்டியில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 61 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரவி யாதவ். இதன்மூலம் சொற்ப ரன்களே எடுத்திருந்த தன்னுடைய அணியின் வெற்றிக்கு அவர் வழிகோலியுள்ளார். மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸ் இறுதியில் 14 ரன்கள் முன்னணியில் உள்ளது.