155 ரன்கள் இலக்கு
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் ஷிகர் தவான், ஜஸ்ட் 8 ரன்களில் கார்த்திக் தியாகி ஓவரில் போல்டாகி வெளியேறினார். பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா மீண்டும் இந்த போட்டியிலும் சொதப்பினார். 12 பந்துகளை சந்தித்து 10 ரன்களில் ஒரு மோசமான ஷாட்டில் தூக்கி அடித்து கேட்ச்சாகி வெளியேறினார். இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட்டாக, கேப்டன் ரிஷப் பண்ட் முஸ்தாபிசூர் பந்தில் போல்டாகி வெளியேறினார். பிறகு ஓரளவு நம்பிக்கை கொடுத்த ஹெட்மயர் முஸ்தாபிசூர் பந்தில், 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இதன் பிறகு, டெல்லி அணியால் மீண்டு வரவே முடியவில்லை. லோ ஆர்டரில் பெரிய ஹிட்டர்கள் இல்லாததால், அந்த அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் சொதப்பல்
இந்த போட்டியில் வெற்றிப் பெற்றுவிட்டால், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி உறுதி செய்துவிடலாம். இதனை மனதில் வைத்தே, அந்த அணி களமிறங்கியது. ஆனால், டெல்லி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, வெறும் 154 ரன்கள் மட்டுமே இந்த அணி எடுத்தது. ஆனால், 'நாங்கள் மட்டும் என்ன சும்மாவா?' என்று டெல்லிக்கு போட்டியாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. சிக்ஸர்களை பறக்கவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் ஆவேஷ் கான் ஓவரில் கீப்பர் கேட்ச்சானார். பிறகு, ஜெய்ஷ்வால் 5 ரன்களில் நோர்ட்ஜே ஓவரில் கேட்ச்சாக, 2வது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான்.
முதல் ஓவரிலேயே விக்கெட்
ஆறு ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ராஜஸ்தான் அணியில், மில்லர் - சஞ்சு சாம்சன் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த சூழலில் பந்து வீச வந்த அஷ்வின் ஓவரில், இறங்கி வந்து சிக்ஸர் தூக்க மில்லர் ஆசைப்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பரிடம் செல்ல, வெறும் 7 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் மில்லர். இந்த விக்கெட், டி20 கிரிக்கெட் போட்டியில் அஷ்வினின் 250வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம், இந்தியாவில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் அஷ்வின் மூன்றாம் இடம் பிடித்தார். அமித் மிஸ்ரா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் 262 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
தேவையில்லாத ஆணி
தற்போது, 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் தள்ளாடி வரும் நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான், பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. குறைவான இந்த டார்கெட்டை நிதானமாக விளையாடினாலே எட்டி விடலாம். ஆனால், லிவிங்ஸ்டன் இறங்கி வந்து சுழற்றி எட்ஜ் ஆகி வெளியேறினார். அதேபோல், மில்லரும் தேவையில்லாமல் அஷ்வின் ஓவரை இறங்கி வந்து ஆட நினைத்து அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இது ரெண்டுமே தேவையில்லாத ஆணி தான்.