துபாய்: 4 வருடங்களுக்கு பிறகு இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் எப்படி ரியாக்ட் செய்தேன் என்பது குறித்து அஷ்வின் உருக்கமுடன் பேசியுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.22) நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
இந்நிலையில், போட்டி தொடங்கும் முன்பு அஷ்வினிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் தமிழில் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அஷ்வின் தான், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த செப்.8ம் தேதி வெளியிடப்பட்டது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்திய அணியில், ரோஹித் சர்மா(wc) , விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்தனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவாய்ட் செய்யப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டது. முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
இந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா, "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஷ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்றார்.
இதையடுத்து, அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அஷ்வின் தனது ட்விட்டரில் பழமொழி ஒன்றை பதிவிட்ட அஷ்வின் அதன் கேப்ஷனில், "2017: இதை சுவரில் எழுதுவதற்கு முன் இந்த குறிப்பை என் டைரியில் 10 லட்சம் முறையாவது எழுதியிருப்பேன்! நாம் படிக்கும் மற்றும் ரசிக்கும் மேற்கோள்கள் உள்வாங்கி, நாம் அதனை நம் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அவை அதிக சக்தி பெறுகின்றன. மகிழ்ச்சியும் நன்றியும் மட்டுமே இப்போது நான் சொல்ல வேண்டிய 2 வார்த்தைகள்" என்று பதிவிட்டிருந்தார்.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
அந்த பதிவில் அவர் ரசித்து அனுபவித்த மேற்கோள் இது தான். "ஒவ்வொரு சுரங்கப் பாதையின் இறுதியும் வெளிச்சத்தை கொண்டிருக்கும். ஆனால், அந்த சுரங்கத்தில் இருப்பவர்கள், அந்த வெளிச்சத்தை ஒருநாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே வாழ்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் ஒருநாள் வரும். அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அதனை அனுபவிப்பார்கள் என்று அந்த பழமொழி மூலம் உணர்த்தியுள்ள அஷ்வினின் இந்த ட்வீட் வைரல் ஆனது.
இந்நிலையில், இன்று போட்டி தொடங்கும் முன்பு பேட்டியளித்த அஷ்வின், "நான் பொதுவாக எப்போது அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அழ மாட்டேன். என் மனைவி மற்றும் சகோதரிகளிடம் நான், 'ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷ்னல் ஆகி அழுதுவிடுகிறீர்கள்?' என்று கேட்பேன். ஆனால், இப்போது தான் உண்மையில் அதன் காரணத்தை நான் உணர்ந்தேன். அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி கேட்டவுடன் உடைந்து அழுதுவிட்டேன். ஆனந்த மிகுதியிலும் அழுகை வரும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.
ஒரு கிரிக்கெட் வீரர் தனது கேரியரில் 70 சதவிகிதம் சிறப்பாக விளையாடியிருப்பார். 30 சதவிகிதம் சரியாக விளையாடாமல் போயிருப்பார். ஆனால், எனக்கு தெரிந்து அனைவருமே அந்த 30 சதவிகிதத்தை மட்டும் தான் பேசுவார்கள் தவிர, அந்த 70 சதவிகிதத்தை பற்றி யாருமே பேச மாட்டார்கள். எனக்கு தெரிந்து யாரும் எப்படி பேசியதும் இல்லை" என்று அஷ்வின் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.