ஐசிசி மாத வீரர் விருது
சர்வதேச அளவில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த விருது வழங்கப்பட்டு வரும்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தேர்வானார்.
ரசிகர்கள் அதிக வாக்கு
இந்நிலையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரராக ஆர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உள்ளிட்டவர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஆர் அஸ்வினுக்கு ரசிகர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவரது ஆட்டம் அபரிதமானதாக இருந்தது.
அடுத்தடுத்த சாதனைகள்
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் சாதனைகளாக விளாசினார் ஆர் அஸ்வின். மேலும் சென்னையில் நடைபெற்ற 2வது போட்டியில் 106 ரன்களையும் குவித்து சாதித்தார். 3வது டெஸ்ட்டில் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை எட்டினார். மொத்தமாக இந்த தொடரில் 176 ரன்கள் மற்றும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறந்த ஐசிசி வீராங்கனை
இந்நிலையில் தற்போது அவர் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல இங்கிலாந்து வீராங்கனை டாமி பியோமான்ட் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மாதத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் தொடர்ந்து அரைசதங்களை அடித்து 231 ரன்களை மொத்தமாக எடுத்துள்ளார் டாமி.