சென்னை : கொரோனா பாதிப்பால் நாடு, நகரம், ஊர் என்று மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகுந்த பிரயத்தனப்படுகின்றனர். மக்கள் தங்களுக்குள் சுய தனிமையை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் தன்னுடைய பெயரையே மாற்றியுள்ளார். எல்லாம் எதற்காக இந்த கொரோனாவிற்காகத்தான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 14 மணி நேரத்திற்கு சுய ஊரடங்கை அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊடரங்கு, பல்வேறு மாநிலங்களையும் முடக்கியது. இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் உள்ளிட்டவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
நாடு, ஊர், மொழி, இனம் என அனைத்தையும் புரட்டிப்போட்டு, கொரோனா என்ற பெயர் ஒன்றை மட்டும் உச்சரிக்கும்படி செய்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரை விட்டுள்ளனர். மூன்றாவது உலகப் போர் என்று கூறும் அளவிற்கு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுவிட்டு சொந்த நாடு, சொந்த மாநிலம், சொந்த ஊர் என தேடிப் போக துவங்கியுள்ளனர். தங்களது சொந்த இருப்பிடங்களில் தாங்கள் தொற்று இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்ற நினைப்பை தந்துள்ளது கொரோனா. ஊரையே மாற்றும் நினைவை தந்துள்ள கொரோனா கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பெயரை மாற்றும் நினைவை தந்துள்ளது.
தன்னுடைய டிவிட்டர் பக்கத்திற்கு தன்னுடைய பெயரை மாற்றி, 'லெட்ஸ் ஸ்டே இன்டோர்ஸ் இந்தியா' என்று புதிய பெயரை தந்துள்ளார் அஸ்வின். இந்தியாவில் இதுவரை 490 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு உத்திகள் மூலம் கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் பெயரை மாற்றியுள்ள அஸ்வின், அடுத்த இரண்டு வாரங்கள் நமக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில், பல இடங்கள் தகவலை கொண்டு சேர்ப்பதே கடினமானது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.