டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் துபாயில் நேற்று ஐபிஎல்லின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் பங்கேற்ற நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எளிதாக வெற்றி கொண்டது. சூப்பர் ஓவரில் காகிசோ ரபடா போட்ட பௌலிங்கால் இந்த வெற்றியை அந்த அணி எளிதாக பெற்றது.
பாதியிலேயே வெளியேற்றம்
இந்நிலையில் அணியில் புதிதாக இணைந்துள்ள ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் தான் போட்ட முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து அந்த ஓவரின் இறுதிப் பந்தில் ரன்னை தடுக்கும்வகையில் டைவ் அடித்து பிடித்த அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த அவர், மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறினார்.
பிசியோவின் முடிவே இறுதியானது
இதனிடையே, அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தான் அடுத்த போட்டியில் பங்கேற்பேன் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் அவர் உறுதியளித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரது பங்கேற்பு குறித்து அணியின் பிசியோ பாட்ரிக் பர்ஹார்ட் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் பாராட்டு
இந்நிலையில், அணியின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அஸ்வின் தன்னுடைய காயத்திலிருந்து மீண்டு வந்து வரும் 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவரது காயம் குறித்து பிசியோவிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.