கொழும்பு: இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் இந்தியா 2 டெஸ்ட்டில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய வீரர் ஜடேஜாவுக்கு, ஐசிசி தடை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய கொழும்பு போட்டியின்போது, இலங்கை அணி வீரர்கள், ஃபாலோ ஆனை தவிர்க்க, பெரும் போராட்டத்துடன் ஆடிவந்தனர். இலங்கை அணியின் மற்ற வீரர்கள் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்துவந்த நிலையில், கருணாரத்னே மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
58வது ஓவரின்போது, அவர் கிரீஸ் கோட்டுக்குள் நின்றிருந்தாலும், வேண்டுமென்றே, ரவீந்திர ஜடேஜா அவரை நோக்கி வேகமாக, மிரட்டும் வகையில், பீல்டிங் செய்த பந்தை வீசினார். இது, அம்பயரின் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த செயலுக்கு கருணாரத்னேவும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் சங்கம், 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட, ஜடேஜாவுக்கு தடை விதித்துள்ளது.
ஐசிசி நடத்தை விதிமுறைகளின்படி, ஜடேஜா, இத்தகைய அபாயகரமான செயலை செய்துள்ளதால், தடை விதிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்பட்டு, தற்போதுதான் மீண்டும் ஜடேஜா விளையாடி வருகிறார். இன்னும் ஒரு முறை அவருக்கு தடை விதிக்கப்பட்டால், கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று, விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.