கெளதம் கம்பீர் விமர்சனம்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்தே கோலி மீது விமர்சனத்தை தொடங்கி வைத்தார் கெளதம் கம்பீர். பெங்களூர் அணி கடந்த இரண்டு சீசன்களில் பிளே-ஆஃப் செல்லவில்லை. இருந்தும் கோலி கேப்டனாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என கடுமையாக சாடினார் அவர்.
பயிற்சியாளர் மாற்றம்
கம்பீர் சொல்வதை எல்லாம் நாம் கண்டு கொள்ள வேண்டாம். பெங்களூர் அணியில் கடந்த சீசனில் இருந்த பயிற்சியாளர்கள் டேனியல் வெட்டோரி உள்ளிட்டோர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தான் தோல்விகளுக்கு காரணமாக இருக்கும். கோலி என்ன செய்வார்? என நம் மனது சமாதானம் சொன்னது.
புதிய பயிற்சியாளர்
இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனை புதிய பயிற்சியாளராக நியமித்து இருந்ததால் பெங்களூர் அணி இந்த முறை பிளே-ஆஃப் செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
போராட்டம் இல்லை
ஆனால், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கி டெல்லி கேபிடல்ஸ் வரை ஆறு போட்டிகளில் தொடர்ந்து அடி வாங்கி இருக்கிறது பெங்களூர் அணி. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே கடைசி ஓவர் வரை போராடி தோற்றது. மற்ற போட்டிகளில் பெரிதாக எந்த போராட்டமும் இல்லை.
என்ன சிக்கல்?
பெங்களூர் அணியில் என்ன சிக்கல் என ஆராய்ந்தால், அணித் தேர்வு, பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தாதது, மற்ற பேட்ஸ்மேன்களை கேப்டன் நம்பாமல் இருப்பது என எல்லாமே கேப்டனிடம் சென்று தான் முடிகிறது.
ஆறுதல் இல்லை
இதை ஊர் உலகமே சொன்னாலும், கோலி இதை கண்டு கொள்ள மறுக்கிறார். ஒரு பந்துவீச்சாளர் மோசமாக பந்து வீசினால், அவரிடம் சென்று உடனே பேசி, அவரை அமைதிப்படுத்தி மீதமுள்ள பந்துகளை சரியாக வீசச் செய்யலாம். ஆனால், கோலி ஒரு பந்து மோசமான உடனேயே தன் முகத்தில் எள்ளையும், கொள்ளையும் வெடிக்க வைத்து விடுகிறார்.
ஓவர் ரியாக்ட் செய்கிறார்
அத்தனை கேமராவும் தன்னைப் பார்க்க "ஓவர் ரியாக்ட்" செய்கிறார். இதைக் காணும் எந்த வீரருக்கும் கேப்டன் நம் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் என்று தான் தோன்றும். கேப்டன் நிதானம் இழந்தால், அணியும் நிதானம் இழக்கிறது. ஆனால், கோலி இதை "தன் அணி வீரர்களுக்கு பொறுப்பில்லை" என்கிறார்.
மூன்று வீரர்கள் மட்டுமே
பேட்டிங்கில் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் தவிர பார்த்திவ் பட்டேல் மட்டுமே பெங்களூர் அணியில் சொல்லிக் கொள்ளும்படி ஆடி வருகிறார்கள். இவர்கள் மூவரும் வரிசையாக முதல் மூன்று இடங்களில் பேட்டிங் ஆடி வருகிறார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களில் பொறுப்பாக ஆடுவார்கள் என கோலிக்கு நம்பிக்கையில்லை.
இந்திய அணி நிலைமை
கோலி ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி, இந்திய அணியிலும் இதே கேலிக் கூத்தை பல முறை செய்துள்ளார். அணியில் தொடர் மாற்றங்கள், ஒரு போட்டியில் சரியாக ஆடாத வீரரை நீக்குவது, மோசமாக டிஆர்எஸ் கேட்பது என கோலியின் தலைமை விமர்சனம் செயப்பட்டும் வருகிறது. ஆனால், அங்கே கோலிக்கு இணையான அனுபவ வீரர்கள் இருப்பதால் அணியின் இளம் வீரர்கள் சமாளித்து வருகிறார்கள்.
விடை தெரியா கேள்விகள்
ஐபிஎல்-இல் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கும் கேப்டன் கோலி மனதளவில் சோர்ந்து போய் விட மாட்டாரா? எப்படி உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தப் போகிறார்? கோலியின் கேப்டன்சியால் பெங்களூர் அணி தோல்வி அடைவதைப் போல இந்திய அணிக்கும் ஆகி விட்டால் என்ன செய்வது என சாமானிய ரசிகன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?