கோலி சொதப்பல்
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் வழக்கம் போல விராட் கோலி 7 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் டூப்ளசிஸ் 25 ரன்களுக்கு வெளியேறினார். இதன்பின்னர் வந்த ரஜத் பட்டிதார் தனி ஒருவராக சீரான வேகத்தில் ரன்களை உயர்த்திய போதும், அவருக்கு யாரும் சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை.
ஏமாற்றிய சீனியர் வீரர்கள்
மேக்ஸ்வெல் 24 ரன்கள், மஹிபால் லாம்ரோர் 8 ரன்கள், தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். மற்றொரு புறம் போராடி வந்த ரஜத் பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்களை குவித்தது.
சுதாரித்துக்கொண்ட ராஜஸ்தான்
குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி எந்தவித பதற்றமும் இன்றி 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 21 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கும், தேவ்தத் பட்டிக்கல் 9 ரன்களுக்கும் அவுட்டாகினர்.
பட்லரின் அதிரடி
ஆனால் மறுமுணையில் அதிரடி காட்டி வந்த ஜாஸ் பட்லர் ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்தார். 60 பந்துகளை சந்தித்த பட்லர் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 106 ரன்களை விளாசினார். இதனால் 18.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டி எப்போது
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் மே 29ம் தேதியன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.