பறிபோன வாய்ப்பு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய போட்டியில் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமாரை விட்டுவிட்டு இளம் வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பளித்ததற்கு அவர் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாதது காரணமாகியுள்ளது. புவனேஷ்வர் குமார் கடைசியாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடி சுமார் 3 வருடங்கள் ஆகிறது. கடைசியாக அவர் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடினார்.
என்ன காரணம்
அதன் பிறகு பல ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடினாலும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டுகளுக்கு சரிபட்டு வர மாட்டார் என்ற முடிவுக்கு பிசிசிஐ தேர்வு குழு வந்துவிட்டது. இதுகுறித்த வெளியான தகவலில், தேர்வுக்குழுவானது, புவேனேஷ்வர் குமாரின் ஃபிட்னஸ் இனி டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துவராது. குறிப்பாக நீண்ட தொடர்களில் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.
அனுபவ வீரர்
கடந்த 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புவனேஷ்வர் குமார் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 63 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் ஒரே இன்னின்ஸில் 5 விக்கெட் எடுக்கும் சாதனையை 4 முறை படைத்துள்ளார். இனி டெஸ்ட் போட்டிகளில் இவரின் எதிர்காலம் முடிந்தது என்றே கூறப்படுகிறது.
சிறந்த வீரர்
எனினும் ஒருநாள் மற்று டி20 போட்டிகளில் அவரின் ஃபார்ம் வியக்கவைக்கும் வகையில் தான் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பந்துவீச்சில் அசத்தினார். இதற்காக 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற பட்டத்தை ஐசிசி வழங்கியது குறிப்பிடத்தக்கது.