துபாய்: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், பிசிசிஐ வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. ஆனால், இந்த கொரோனாவுக்கு காரணம் அந்த பர்த் டே பார்ட்டி தானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இன்று நடைபெறும் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே.3ம் தேதி வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீரராக பரவ, தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ. இதன் பிறகு ஒருவழியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த செப்.19ம் தேதி ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இன்றைய (செப்.22) லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நடராஜன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும், விஜய் சங்கர் உட்பட 6 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால், இன்று திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த முறையும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியால், ஐபிஎல்-ல் கொரோனா தொற்று ஏற்பட, இப்போது மற்றொரு தமிழக வீரரான நடராஜன் மூலம் மீண்டும் ஐபிஎல்லுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா. இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள், கிடுக்குப்படி தாண்டி நடராஜனுக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்பதே கேள்வியாக உள்ளது. வருண் சக்கரவர்த்தியை பொறுத்தவரை அவர் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்த போது, கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தார். நடராஜனும் அப்படி வெளியே சென்று வந்தாரா? என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் நடந்த ஒரு பர்த் டே பார்ட்டி தான் கொரோனாவுக்கு காரணமாக இருக்குமோ சந்தேகிக்கப்படுகிறது.
ஆம்! கடந்த செப்.20ம் தேதி நடராஜனின் சக வீரரான ரஷீத் கான் பிறந்தநாள் கொண்டாட்டம் சன் ரைசர்ஸ் கேம்ப்பில் கோலாகலமாக அரங்கேறியது. இதில் வெளியே இருந்து கேக்குகள் மற்றும் இதர பர்த்டே கொண்டாட்ட ஐட்டங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்ட வீடியோக்களை சன் ரைசர்ஸ் நிர்வாகமே சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டது. இந்த பிறந்தநாள் விழாவுக்காக நடராஜன் வெளியே எங்கும் சென்றாரா என்ற கோணத்திலும் இதை பார்க்க வேண்டியுள்ளது. அல்லது வெளியில் இருந்து பொருட்களை வாங்கி வந்தவர்கள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. எது எப்படியோ.. அமீரகத்தில் ஐபிஎல் பயோ-பபுளை கொரோனா மீண்டும் உடைத்துவிட்டது என்பது மட்டும் உறுதி!
இங்கிலாந்துல கொரோனா வந்தா இரத்தம்.. ஐபிஎல்-ல வந்தா தக்காளி சட்னியா?