கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் இந்தியாவில் லாக்டவுன் அமலில் உள்ளது. பல தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு கிரிக்கெட்டும் விதி விலக்கல்ல. ஐபிஎல் தொடர் முதல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர்கள் உதவி
கொரோனா வைரஸுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு வழிகளில் நிதி உதவி செய்தனர். அது தொடர்பான செய்திகளும் வெளியாகின. சிலர் உணவு அளித்தனர். தோனி எப்போதும் பொது வெளியில் அதிகம் வராதவர் என்பதால் அவர் என்ன செய்தார் என்பது வெளியே தெரியவில்லை.
தோனி சர்ச்சை
ஒரு முறை இணையத்தில் ஒரு அமைப்புக்கு அவர் ஒரு லட்ச ரூபாய் நிதி அளித்த தகவல் வெளியானது. அப்போது பல கோடி வைத்துள்ள தோனி ஒரு லட்சம் மட்டும் தான் அளித்தாரா? என தேவையற்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், தோனி என்ன உதவி செய்தார் என்பது யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.
மற்ற வீரர்கள் என்ன செய்கிறார்கள்?
விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இன்ஸ்டாகிராமில் தினமும் பேட்டி எடுத்துக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் உள்ளனர். மற்ற வீரர்கள் பலரும் தங்கள் வீட்டில் என்ன செய்து பொழுதை போக்குகிறோம் என ரசிகர்களுக்கு கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
தோனியின் அமைதி
ஆனால், தோனி வழக்கம் போல அமைதியை கடைபிடித்து வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்பது அவரது மனைவி சாக்ஷி அவ்வப்போது வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமே வெளியாகி வருகிறது. தோனி இந்த லாக்டவுனில் ஒரு பேட்டி கூட அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆவல்
சமீபத்தில் சாக்ஷி தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவருடன் தோனி வீடியோவில் தோன்றுவாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.
தோனி ஏன் பேசவில்லை?
அந்த பேட்டியில் சாக்ஷி, தோனியின் அமைதி பற்றி பேசினார். தோனி பற்றி உங்களுக்கே தெரியும். அவர் இன்ஸ்டா லைவ்வில் எல்லாம் வர மாட்டார். அவர் கொரோனா வைரஸ் பற்றி வீடியோ வெளியிட வேண்டும் என அழுத்தத்தில் இருந்தார். ஆனால் செய்யவில்லை என்றார்.
காரணம் இதுதான்
அதற்கு காரணம், பிரதமர் ஒரு விஷயத்தை கூறி இருந்தார். மற்றவர்கள் அதை பின்பற்றுவார்கள். இந்த நேரத்தில் பிரதமரை விட யாருமே இந்த நாட்டில் பெரியவர் இல்லை. அதனால் தான் தோனி சமூக வலைதளத்தில் எந்த விஷயத்தையும் கூறவில்லை என சாக்ஷி விளக்கம் அளித்தார்.
என்ன செய்கிறார் தோனி?
தோனி இந்த லாக்டவுனில் என்ன செய்கிறார்? என்பது பற்றியும் சாக்ஷி கூறினார். புதிய பைக்கை அவரே அசெம்ப்ளி செய்து வருகிறார். படுக்கையில் கூட பப்ஜி (PUBG) விளையாடி வருகிறார். புதிய ட்ராக்டர் வாங்கி உள்ள தோனி, அதை தன் பண்ணையில் ஓட்டி மகிழ்ந்து வருகிறார்.