மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று (செப்.8) வெளியானது. இதில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
"ஒருநாள் விடியும்".. டி20 அணியில் மீண்டும் இடம் - மில்லியன் தடவை அஷ்வின் எழுதிய வாசகம்
இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர்.. அது முடிந்தவுடனே உலகக் கோப்பை டி20 தொடர் என்று அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே திருவிழா மயம் தான். அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நேற்று (செப்.8) உலகக் கோப்பைக்கான இந்திய அணி வெளியானது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியில், ரோஹித் சர்மா(wc) , விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
வீரர்கள் அறிவிப்பை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட வந்த ரசிகர்கள், தோனி பெயரை அந்த பட்டியலில் நிச்சயம் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த 2020ம் ஆண்டு, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுப் பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இதோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சியில் பந்துகள் வழக்கம் போல் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் பறந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் அவர் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகமே. இந்நிலையில், உலகக் கோப்பை டி20 தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை என்பதால் தோனியை ஆலோசகராக நியமித்திருக்கிறார்கள் என்பது ஓகே. ஆனால், பலரது கேள்வி என்னவெனில், "தற்போது கேப்டன்ஷிப்பில் உச்சத்தில் இருக்கும் விராட் கோலி அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். அப்படியிருக்க, அனுபவம் வாய்ந்த கேப்டன் கோலிக்கு ஆலோசகர் எதற்கு? இது அவரது கேப்டன்ஷிப் தரத்தை குறைக்கும்படி ஆகாதா? அதான் பயிற்சியாளரும் அணியில் இருக்கிறாரே? பிறகு எதற்கு தோனி? என்று பலரும் சமூக தளங்களில் கேள்வி எழுப்பியிருப்பதை காண முடிகிறது.
இதற்கு ஒரே காரணம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தான். ஆம்! கங்குலி தான் உலகக் கோப்பை டி20 அணியின் ஆலோசகராக தோனி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பிரபல விளையாட்டுச் செய்தியாளர் போரியா மஜூம்தார் தனது ட்விட்டரில், "தோனி அணியின் ஆலோசகராக செயல்பட வேண்டும் என்று கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி உட்பட அனைவரிடமும் பேசியுள்ளனர். அனைத்து தரப்பிலும் இதற்கு முழு சம்மதம் தெரிவிக்க, தோனி இந்திய அணியுடன் இணையும் முடிவு எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார். கங்குலியின் இந்த எண்ணத்துக்கு முக்கிய காரணம், ஐசிசி கோப்பைகளை விராட் கோலி அதிகம் வெல்லாதது தான் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். டி20 உலகக் கோப்பை அமீரகத்தில் நடைபெறுவதால், எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி, 2019ல் நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி என்று விராட் கோலி தலைமையில் இதுவரை எந்தவித முக்கியமான ஐசிசி கோப்பைகளும் கிடைக்கவில்லை. ஸோ, இம்முரை டார்கெட் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காகவே தோனியை அணியில் கங்குலி கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.