ஒருநாள் தொடரில் தோல்வி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் கைநழுவ விட்டது. இந்திய அணியின் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடியது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதனிடையே, கடந்த 2வது டி20 போட்டியில் ஆரோன் பின்ச் காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக மாத்யூ வேட் கேப்டனாக களமிறங்கினார். முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.
நிறைவு பெற்ற தடை
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ல் கேப்டன் பொறுப்பிலிருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தார். இந்த தடை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவருக்கு கேப்டன் பொறுப்பு தரப்படாமல் உள்ளது.
அதிகமான நடைமுறைகள்
இந்நிலையில், அவர் கேப்டனாவதற்கு அதிகமான நடைமுறைகள் உள்ளதாகவும் அதற்காக நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் எப்போது இது நிறைவடையும் என்று தெரியவில்லை என்றும் அணியின் தலைமை கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தும் தன்னை நிரூபிக்க தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.