பயிற்சி ஆட்டம்
இதற்காக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள சூழலில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். கடந்த போட்டியில் கேப்டன்சி செய்த கோலிக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
சர்ப்ரைஸ் கொடுத்த ரோகித்
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய, இந்திய அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்து அஸ்வின் மற்றும் ஜடேஜா அசத்தினர். இந்நிலையில் யாரும் எதிர்பார்காத வகையில் விராட் கோலியை பந்துவீச கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அதுவும் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருக்கும் போது விராட் கோலி ஓவர் வீசினார். இந்த ஓவரில் நன்றாக வீசிய கோலி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
காரணம் என்ன
இந்நிலையில் பயிற்சி போட்டியிலேயே கோலியை பந்துவீச அழைத்தது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபிட்னஸ் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் ஒருவேளை பந்துவீசவில்லை என்றால் ஃபினிஷராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே 6வதாக இந்திய அணிக்கு பந்துவீச ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என்ற சூழல் உள்ளது. இதனை சரிசெய்யவே விராட் கோலிக்கு ஓவரை கொடுத்து பரிசோதித்துள்ளார் ரோகித் சர்மா.
ரோகித்தின் பேச்சு
டாஸின் போது பேசிய ரோகித் சர்மா, ஹர்திக் இன்னும் பந்துவீச தயாராக வில்லை. அவர் லீக் போட்டிக்குள் தயாராவார் என நினைக்கிறேன். இந்திய அணி 5 தரமான பவுலர்களை தான் வைத்திருக்கும். எனினும் 6வதாக ஒரு பவுலரை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காக ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மூவரில் யாரேனும் பந்துவீசுவோம் எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போல கோலி இன்று பந்துவீசியுள்ளார்.