மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தன் ஜியோ டிவி செயலி மூலம் ஒளிபரப்ப ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் சேவைகளை வழங்கி வருகிறது. அதிக இன்டர்நெட் வழங்குவதோடு, ஜியோ செயலிகள் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது.
அதில் ஒன்று தான் ஜியோ டிவி. இதில் கிட்டத்தட்ட அனைத்து மொழி சானல்களும் ஒளிபரப்பாவதோடு, லைவ் கிரிக்கெட் போட்டிகளும் பார்க்க முடிகிறது. கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ஜியோ டிவியில் கிரிக்கெட் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல கோடிகளை தொடும்.
தற்போது ஸ்டார் இந்தியா நிறுவனம், பிசிசிஐ-யோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமையை 6138 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தனியாக 16,348 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது.
எனவே, ஸ்டார் இந்தியா நிறுவனம் மட்டுமே அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்ப முடியும் என்ற சூழ்நிலையில், ஜியோ நிறுவனம் அதனோடு ஐந்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளை தன் செயலியில் ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதன் மூலம், ஜியோ சேவை இணைப்போடு, ஜியோ டிவி செயலி வைத்திருக்கும் அனைவரும் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.