சொதப்பிய விராட் கோலி
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து மோதிய விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் கே.எல். ராகுலின் இரண்டு கேட்ச்களை மிஸ் செய்த ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கிலும் சொதப்பினார்.
சுனில் கவாஸ்கர் கமெண்ட்
இதையடுத்து போட்டியின் கிரிக்கெட் வர்ணனையை மேற்கொண்ட முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி சிறப்பாக விளையாடாததை சுட்டிக் காட்டி, லாக்டவுன் காலத்தில் அவர் அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கை மட்டுமே எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
வறுத்தெடுத்த நெட்டீசன்கள்
இதையடுத்து சமூகவலைதளங்களில் நெட்டீசன்கள் அவரை வறுத்தெடுத்து விட்டனர். அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், விராட் கோலி சரியாக விளையாடாத நேரங்களில் எல்லாம் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை வம்பிழுப்பது எந்தவகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தல்
மேலும் தன்னுடைய மதிப்பை தானே குலைக்கும்வகையில் கமெண்ட் செய்துள்ள சுனில் கவாஸ்கரை வர்ணனையாளர் பதவியிலிருந்து பிசிசிஐ உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு வீரர் சரியாக விளையாடாத நிலையில் அவரது மனைவி குறித்த கமெண்ட் செய்வதை வர்ணனையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.