ஐபிஎல் போட்டிகள்
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை கண்டு வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கியது மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. வீரர்களின் பேட்டிங் அதிரடி, பவுலிங்கில் கடைசி நேர ட்விஸ்ட் என இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளும் வீரர்களுக்கு விருந்து படைத்திருந்தது. இதுமட்டுமல்லாமல் அமீரகத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வீரருக்கு கொரோனா
இந்நிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு புதிய ஆப்பு ஒன்று வந்துள்ளது. அமீரகத்தில் நடந்துவரும் 2வது பாதி ஐபிஎல் தொடரிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அணி வீரர்களுக்கு வழக்கமாக போட்டிக்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பின்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்தவகையில் எடுக்கப்பட்ட சோதனை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்கள் குவாரண்டை
இதனையடுத்து அந்த அணியின் வீரர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பரிசோதனையின் முடிவில் தான் இன்றைய போட்டி நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.
எப்படி தொற்று பரவியது
கொரோனா உறுதியான வீரரின் விவரங்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை. பயோ பபுள் பாதுகாப்புடன் இருக்கும் வீரர்களுக்கு கொரோனா எப்படி பரவியிருக்கும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதுதான் கொரோனா பரவலுக்கு வழிவகை செய்ததா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.